ஏன் பரபரப்பு.. 15 நிமிஷம் டிராபிக் ஜாமில் சிக்குவதெல்லாம் நமக்கு டெய்லி அனுபவம்: கார்த்தி சிதம்பரம்
சென்னை: 15 நிமிடங்களில் போக்குவரத்தில் சிக்கிக் கொள்வது நமக்கெல்லாம் அன்றாட அனுபவம் என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் ரூபாய் 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட இருந்தார். இதற்காக அவர் பஞ்சாப் செல்ல முற்பட்டார்.
அப்போது மோசமான வானிலை நிலவியது. 20 நிமிடங்கள் பொறுத்திருந்து பார்த்துவிட்டு வானிலை சீராகாததால் பஞ்சாப்பிற்கு செல்ல ஹெலிகாப்டர் பயணத்தை பிரதமர் மோடி தவிர்த்தார். இதையடுத்து சாலை மார்க்கமாக பெரோஸ்பூருக்கு சென்று கொண்டிருந்தார். பிரதமரின் இந்த சாலை பயணம் கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது.

பதிண்டா விமான நிலையம்
அப்போது ஹூசைனிவாலா பகுதியில் உள்ள பாலம் ஒன்றில் விவசாயிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதமரின் கார், பாதுகாப்பு துறை அதிகாரிகளின் கான்வாய் உள்ளிட்டவை சுமார் 15- 20 நிமிடங்கள் பாலத்திலேயே சிக்கிக் கொண்டது. இதையடுத்து தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு பதிண்டா விமான நிலையத்திற்கே திரும்பி சென்றார்.

பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி
பிரதமரின் பாதுகாப்பில் இத்தனை குளறுபடியா என நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் பதிண்டா விமான நிலையம் வரை தான் உயிரோடு செல்ல அனுமதி அளித்ததற்கு முதல்வருக்கு நன்றி என கூறுமாறு பஞ்சாப் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி சொன்னதாக தெரிகிறது.

குடியரசுத் தலைவர் அதிருப்தி
பிரதமர் அவ்வாறு சொல்லும் அளவுக்கு பஞ்சாப் விவசாயிகள் யாரும் வன்முறையில் இறங்கவில்லையே கான்வாய் மீது தாக்குதல் நடத்தவில்லை. வேறு ஏதும் செய்யவில்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் வருந்தியதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து விளக்கமளிக்க பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.

கார்த்தி சிதம்பரம்
இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி குறித்து சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் 15 நிமிடங்கள் டிராபிக் ஜாமில் சிக்குவது என்பது நம் எல்லோருக்கும் தினசரி அனுபவமாகும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications