அமைச்சர் ஐ.பெரியசாமி கருத்து ஒரு குப்பை! கார்த்தி சிதம்பரம் விமர்சனம்! ஜோதிமணி ஏன் பேசாம இருந்தாங்க!
சென்னை: காங்கிரஸ் கட்சியினர் குறித்து அமைச்சர் பெரியசாமி பேசிய கருத்து குப்பை என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். மேலும் அந்த மேடையில் இருந்த ஜோதிமணி எம்பி, எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது காங்கிரஸ் கட்சியினரிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் வீராசாமியின் இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், சுழன்று சுழன்று எல்லா பணிகளை செய்தாலும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டது பெருமை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சாமானியர்களை மதித்து சாமானியர்களுக்கு அரசியல் அரங்கத்தில் பதவிகள், பட்டங்கள் மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்துடன் இணைந்து இருக்கக் கூடிய ஒரே இயக்கம் திமுக. இதை யாராலும் மறுக்க முடியாது. இங்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இருக்கிறார். காங்கிரஸில் பெரிய தலைவர்கள் பணக்காரர்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே செல்வார்கள், அவர்களைக் குறைத்துக் கூறவில்லை.
ஆனால் திமுகவை பொருத்தமட்டில் சாமானியர்களை உயர்த்தி பிடித்து மதிப்பளிக்கக் கூடிய இயக்கம். பணத்தால், செல்வத்தால் நாம் உயரவில்லை. திமுகவால்தான் உயர்ந்திருக்கிறோம். திமுகவுக்கு சமமாக எந்த இயக்கமும் வர முடியாது என தெரிவித்தார்.
கூட்டணியில் இருந்து கொண்டு இன்னொரு கட்சியை பெரியசாமி பேசியிருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுக- காங்கிரஸ் கட்சி இடையே மோதல் போக்கு இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. மேலும் காங்கிரஸ் கட்சி வேறு கூட்டணிக்கு தாவ போவதாகவும் செய்திகள் வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை தேவையில்லாமல் பெரியசாமி விமர்சித்துள்ளார் என காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு காலத்தில் ஏழைகளின் மனுக்களை பெரியசாமி, தனது பாத்ரூமில் போட்டு வைத்திருந்ததை அவருக்கு நினைவூட்டுகிறோம். மனு கொடுத்தவர்களும் சாமானியவர்கள்தான் என காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், தன் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பணக்காரர் வீட்டு நிகழ்ச்சிக்கே காங்கிரஸ் கட்சியினர் செல்வார்கள் என அமைச்சர் பெரியசாமி சொன்ன கருத்து ஒரு குப்பை என விமர்சித்துள்ளார்.
கார்த்தி சிதம்பரத்தின் கருத்துகளை காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்து வருகிறார்கள். மேலும் மேடையில் அமர்ந்திருந்த கரூர் எம்பி ஜோதிமணி, ஏன் அந்த கருத்தை எதிர்க்கவில்லை என அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications