கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாள் விழா.. நினைவிடத்தில் ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை
சென்னை: கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளில் ஆடம்பர நிகழ்ச்சிகள் வேண்டாம் என கட்சியினருக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

திமுகவினர் அவரவர் இருக்கும் இடங்களிலேயே கருணாநிதியின் சிலைகளுக்கும் உருவப்படங்களுக்கும் மரியாதை செலுத்தினால் போதுமானது என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மெரினாவில் உள்ள நினைவிடத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி, துரைமுருகன் எம்எல்ஏ, டி.ஆர். பாலு எம்பி, நடிகரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்றனர்.
அங்கு சமாதியில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். பின்னர் தந்தையிடம் ஆசி பெற்றார். இதையடுத்து ஒருவர் பின் ஒருவராக கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். அங்கு ஒரு ஜோடிக்கு ஸ்டாலின் தலைமையில் எளிய முறையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்களை ஸ்டாலின்,துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
அனைவரும் மாஸ்க் அணிந்தபடி சமூக இடைவெளியை கடைப்பிடித்தபடி கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications