கருணாநிதி சிலை திறப்பு: கை குலுக்கி வரவேற்ற ஸ்டாலின்.. முதல் வரிசை மரியாதை.. நெகிழ்ந்த ரஜினிகாந்த்
Recommended Video
சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக, அண்ணா அறிவாலயம் வருகை தந்த நடிகர் ரஜினிகாந்தை, கைகுலுக்கி வரவேற்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அதில் பங்கேற்க வருகை தந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் மாலை 4.30 மணி அளவில் அண்ணா அறிவாலயம் வந்தார். அவருக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.
கைகுலுக்கி வரவேற்பு
ரஜினிகாந்த் தனது இருக்கை வரிசைக்கு வந்ததும், அங்கே ஏற்கனவே அமர்ந்திருந்த நடிகர் சத்ருகன் சின்கா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரிடம் நின்றபடியே பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மு.க.ஸ்டாலின் விரைந்து வந்தார். அவர் ரஜினிகாந்தின் கைகளை பிடித்து குலுக்கியபடி முகம் மலர்ந்தது வரவேற்றார்.
சந்ருகன் சின்கா
இருவரும் சுமார் மூன்று முறை கைகுலுக்கிக் கொண்டனர். இதன்பிறகு வைகோவின் கைகளை குலுக்கி ஸ்டாலின் வரவேற்றார். இதைத்தொடர்ந்து சத்ருகன்சின்கா அருகே உள்ள இருக்கையில் ரஜினிகாந்த் அமர வைக்கப்பட்டார். இருவரும் மிகவும் தீவிரமாக பல விஷயங்களை பேசிக் கொண்டு இருந்ததை கவனிக்க முடிந்தது.
முரசொலி விமர்சனம்
சமீபத்தில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், ரஜினிகாந்த்தை விமர்சனம் செய்து கட்டுரை இடம் பெற்றிருந்தது. இதனால் திமுக மற்றும் ரஜினிகாந்த் நடுவே உறவு சரியில்லையோ என்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால் பிறகு முரசொலி நாளிதழ், தனது கட்டுரைக்காக, வருத்தம் தெரிவித்தது. சமீபத்தில், ரஜினிகாந்த் பிறந்த நாளின் போது ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். ரஜினிகாந்த் பதிலுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
முதல் வரிசை
இந்த நிலையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில், ரஜினிகாந்த்திற்கு, முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதோடு, அவரிடம் சில வினாடிகள் கைகுலுக்கியபடி ஸ்டாலின் வரவேற்றதும் திமுக தொண்டர்கள் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.