ஸ்டிரைட்டா மேட்டருக்கு வந்த கருணாஸ்.. கூவத்தூரில் நானும் தான் இருந்தேன்.. "2" தானே கேட்கிறேன்..!
சசிகலா குறித்து கருத்து சொல்லி உள்ளார் கருணாஸ்
சென்னை: "சின்னமா இன்னைக்கு நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்.. இந்நிலையில், நானும் மற்றவர்களை போல கீழ்த்தனமான அரசியல் செய்ய விரும்பவில்லை.. கூவத்தூர் ரிசார்ட்டில் நானும்தான் இருந்தேன் என்று உலகத்துக்கே தெரியும்... ஒருவருக்கு உடம்பு சரியில்லாமல் சிகிச்சை பெற்று வரும்போது, அவரை குறித்து தவறான அரசியல் செய்யாமல், மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும்" என்று கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், அதிமுக கூட்டணியில் தனக்கு 2 சீட் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
திருப்பூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காங்கயத்தில் நடந்தது.. இதில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனரும், எம்எல்ஏவுமான கருணாஸ் கலந்து கொண்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, "மூத்த குடியான தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட முக்குலத்தோருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறோம்.. தேர்தல் நெருங்க இருக்கின்ற சூழ்நிலையில் அதிமுக எங்களை போன்ற சிறிய அமைப்புகள் கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடு நடத்தும்.
முக்குலத்தோர்
சென்ற முறை ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற எங்களுக்கு தற்போது 2 சட்டமன்றத் தொகுதிகள் வேண்டும் என்று கேட்போம்... முக்குலத்தோர் புலிப்படை கட்சி எந்த அமைப்பிற்கும் ஜாதிக்கும் எதிரானவர்கள் கிடையாது.. அவரவர் ஜாதிக்கான உரிமையை கேட்பது அதனை மாநில அரசு வழங்குவதும் வரவேற்கத்தக்கது. வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினால், முக்குலத்தோரின் 50 ஆண்டு கால கோரிக்கையான மதுரை ஏர்போர்ட்டிற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
முதலமைச்சர்
சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை, சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவால்தான் முதலமைச்சர் பதவிக்கு வந்தேன் என்று எடப்பாடி சொல்கிறார்.. கூவத்தூர் ரிசார்ட்டில் நானும் இருந்தேன் என்று உலகத்துக்கே தெரியும்... மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் 27 வருஷமாக ஒரு நிழல் போல இருந்தவர் சசிகலா... புரட்சி தலைவி அம்மாவின் நிழலாக செயல்பட்டு வந்த சின்னமா இன்னைக்கு நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கிறார்..
சிகிச்சை
அதனால் நானும் மற்றவர்களை போல கீழ்த்தனமான அரசியல் செய்ய விரும்பவில்லை... உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், யாருமே அவரை குறித்து தவறான அரசியல் செய்யாமல், மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும்.. அதிமுக சசிகலாவின் கட்சி. ஜெயலலிதா மறைந்த பிறகு அனைத்து நிர்வாகிகளும் சேர்ந்துதான் சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் பொறுப்பு தந்தனர்..
முக்குலத்தோர் புலிப்படை
அதற்கு பிறகு ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக திடீர் முடிவுகள் எடுக்கப்பட்டன... அதிமுகவில் தோழமை கட்சியாகத்தான் முக்குலத்தோர் புலிப்படை உள்ளது... நிச்சயமாக இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம். எங்களது கட்சி தனி சின்னம் பெரும் அங்கீகாரம் தற்போது இல்லை. அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. 2 சீட்தான் கேட்கிறோம்.. ஏன்னா, என்னோட மட்டுமே அது போயிடக்கூடாது.. எனக்கு பிறகு, என்னை சார்ந்தவர்களும் இந்த அரசியலுக்குள் வரணும்.. சமுதாய ரீதியில் ஒரு பாதுகாப்பு அரண் தேவை என்பதால்தான் 2 சீட் கேட்கிறேன்.." என்றார்.
பசும்பொன் தேவர்
இந்த பேட்டி தமிழக அரசியலில் புயலை கிளப்பி வருகிறது.. காரணம், கருணாஸ் பேசியுள்ள 2 விஷயங்கள் கவனிக்கத்தக்கவை.. பாமகவுக்கு இடஒதுக்கீடு தந்தால், தங்கள் கட்சிக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார், மேலும், வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினால், மதுரை ஏர்போர்ட்டிற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதால், அதிமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பாமகவுக்கு எந்த காலத்திலும் உள்ஒதுக்கீடு என்ற விஷயத்தை செயல்படுத்த முடியாது என்றே தெரியவருகிறது.
சஸ்பென்ஸ்
அதேபோல, "எடப்பாடி பழனிசாமி சசிகலாவால் உருவாக்கப்பட்டவரா? எம்எல்ஏக்களால் உருவாக்கப்பட்டவரா" என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு கருணாஸ் நேரடியாக எந்த பதிலையும் சொல்லாமல், "அதை நான் சொல்லக்கூடிய நேரம் வரும்போது நிச்சயமாக சொல்வேன்..." என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
முதல்வர்
அன்று கூவத்தூர் சம்பவத்தில் அதிக அளவு பேசப்பட்டவர், சர்ச்சைகளுக்கு உள்ளானவர், சலசலப்பை ஏற்படுத்தியவர், கருணாஸ்தான்.. சசிகலாவின் தீவிர ஆதரவாளராகவே இப்போது வரை கருதப்படுகிறார்.. ஜெயிலுக்குள் சசிகலா இருந்தபோதுகூட, எடப்பாடியாருக்கு முழு ஆதரவாக கருணாஸ் செயல்படாமல் இருந்ததே, சசிகலா மீதான விசுவாசத்திற்கு உதாரணமாகும்.. இப்போதும், 2 சீட் கேட்டு வரும் நிலையில், 2 கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில், சசிகலாவுக்கு வழக்கம்போல் புகழ்பாடி உள்ள நிலையில், "நேரம் வரும்போது சொல்வேன்" என்று பொடி வைத்து பேசியுள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது.