கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜர்! இறுகும் பிடி
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக டெல்லி அலுவலகத்தில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் விசாரணைக்கு ஆஜர் ஆகி உள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக தவெக நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தி வருகிறார். அந்த வகையில், கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய், கரூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் முகாமிட்டு கடந்த சில வாரங்களாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
சம்பவ பகுதியில் கடை வைத்து இருந்தவர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உள்ளிட்டோருடன் விசாரணை நடைபெற்றது. தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கரூர் மேற்கு மாவட்ட தவெக பொதுச்செயலாளர் மதியழகன் ஆகியோரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதேபோல, கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட எஸ்பி ஜோஷ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், கரூர் நகர எஸ்பி மணிவண்ணன் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆகினர்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக உயர் மட்ட நிர்வாகிகள், கரூர் கலெக்டர், எஸ்பி உள்ளிட்டோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை காட்டுவதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications