கரூர் துயரம்.. 4 நிமிட வீடியோ வெளியிட்டும்.. ஒரு இடத்தில் கூட மன்னிப்பு கேட்காத விஜய்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதல் முறையாக விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். 4 நிமிடம் பேசும் அந்த வீடியோவில் ஒரு இடத்தில் கூட விஜய் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக தமிழக அரசு மீது பழி போடும் விதமாக அவர் பேசியிருக்கிறார். சம்பவம் நடந்தபோது பத்திரிகையாளர்கள் கூப்பிட்டு கேட்டபோது கூட எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வேக வேகமாக புறப்பட்டு சென்னை வீட்டிற்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கரூரில் கடந்த சனிக்கிழமை விஜய் பரப்புரை மேற்கொண்டார். மதியம் 12 மணிக்கு வேலுசாமிபுரத்தில் விஜய் வருவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த நிலையில் 7 மணிக்கு விஜய் வருகை தந்தார்.

இதனால் மதிய சாப்பாடு கூட சாப்பிடாமல் தொண்டர்கள் எல்லாரும் விஜய்யை பார்த்துவிட்டு தான் செல்ல வேண்டும் என்று நீண்ட நேரம் காத்துக்கொண்டு இருந்தனர். விஜய் பேசும்போதே நிறைய பேர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து ஒவ்வொருவரையாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்து துயர சம்பவம் நடந்தது பற்றி விஜய்க்கு தெரிந்தும் அவர் கரூருக்கு வரவில்லை.
திருச்சிக்கு வேகமாக சென்ற விஜய் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை சென்றடைந்தார். சம்பவம் நடந்த உடனேயே ட்வீட் கூட போடவில்லை. திருச்சி விமான நிலையத்திற்கு சென்ற விஜய்யிடம் கரூரில் 31 பேர் இறந்துவிட்டாங்க எதாவது சொல்லுங்க என்றபோது கூட எதுவும்சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி போய்விட்டார். பிறகு சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக வீட்டிற்கு சென்ற பிறகு அதாவது 3 மணி நேரம் கழித்து விஜய் ட்வீட் போட்டார்.
ஆனால் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை இப்போது வரை பார்க்கவில்லை. விஜய் மட்டுமின்றி அவரது நிர்வாகிகளோ, மாநில நிர்வாகிகளோ என யாருமே கரூர் மக்களை பார்க்கவில்லை. இந்த நிலையில் சம்பவம் நடந்த 3வது நாளில் இன்று விஜய் வீடியோ ஒன்றை போட்டுள்ளார். இதில் விஜய் மன்னிப்பு என்று கேட்கவே இல்லை. 41 பேர் வரை உயிரிழந்து இருக்கிறார்கள், ஆனால் அதற்காக விஜய் மன்னித்துவிடுங்கள் என்று சொல்லவே இல்லை..
மாறாக சிஎம் சார், பழி வாங்க வேண்டும் என்றால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என் தொண்டர்கள் மீது கை வைக்காதீங்க.. என்று சொல்கிறார். தாமதமாக விஜய் வந்ததாலேயே இவ்வளவு அதிக கூட்டம் வந்தது என்றும், ஒரு ஒழுங்கமைப்பு இல்லை எனவும் பலரும் குற்றச்சாட்டு வைத்து வரும் நிலையில், தன் வீடியோவில், லேட் ஆகி வந்தேன், விதிமீறல் என்ற வார்த்தைகளையே விஜய் பயன்படுத்தவில்லை. விஜய்யின் இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் வீடியோவில் பேசியிருப்பதாவது:- எல்லாருக்கும் வணக்கம். என் வாழ்க்கையில் இதுபோன்ற வலி மிகுந்த தருணத்தை பார்த்ததில்லை..
மனது முழுக்க வலி.. வலி மட்டும் தான்.. கரூருக்கு நான் வந்து பார்க்கவில்லை என விமர்சிக்கிறார்கள்.. அதுக்கு எல்லாம் காரணம் நான் உங்க மீது வைத்த பாசம் தான்.. இனி மக்கள் பாதுகாப்பே முக்கியம்.. மக்களுடைய பாதுகாப்புக்காக மட்டும் தான் நாங்க போலீஸிடம் பாதுகாப்பான இடத்தை கேட்கிறோம். ஆனால் நடக்க கூடாத விஷயம் நடந்துவிட்டது.
நானும் ஒரு மனிதன் தானே.. பதற்றமான சூழல், மீண்டும் நானும் அங்கே சென்று இருக்க வேண்டும் தான் நினைத்தேன்.. ஆனால் அங்கு சென்றால் மேலும் நிலைமை மோசமாகிவிட கூடாது.. 5 பிரசார இடங்களுக்கு சென்று இருக்கிறேன். அங்கு எல்லாம் ஒன்னுமே நடக்கல.. ஆனால் கரூரில் மட்டும் இப்படி நடக்குது.. இது எல்லாம் மக்களுக்கு தெரியும்.. மக்கள் எல்லாத்தையும் பார்த்துகொண்டு தான் இருக்காங்க..
சிஎம் சார் உங்களுக்கு எதாவது பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க.. என் வீட்டிலேயோ அல்லது ஆபிசிலயோ தான் இருப்பேன்.. என் தொண்டர்கள் மக்களை மட்டும் எதுவும் பண்ணாதீங்க.. எனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும்.. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் வெளியிட்ட ட்வீட் பதிவில், "கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.
நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது. என் சொந்தங்களே... நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.
அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications