பை.. பை.. இன்றுடன் விடைபெறுகிறது கத்தரி வெயில்.. இனியாவது குறையுமா வெப்பம்?
Recommended Video
சென்னை: தமிழகத்தில் கடந்த 26 நாட்களாக நீடித்து வந்த கத்தரி வெயில் இன்றுடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் தொடங்கியது.
கடந்த 26 நாட்களாக கத்தரி வெயில் சுட்டெரித்து வந்தது. இந்தக் காலக்கட்டத்தில் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் கொளுத்தியது. கடும் வெயிலோடு அனல்காற்றும் வீசியதால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.

அதேநேரத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கோடை மழையும் கொட்டித் தீர்த்தது. இதனால் வெப்பம் ஓரளவுக்கு தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் கத்தரி வெயில் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் நாளை முதல் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கத்தரி வெயில் முடிவடைந்தாலும் இன்னும் இரு நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் அனல்காற்று குறையாது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜூன் முதல்வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்றும், பருவமழை தீவிரமடைந்தால் வெயில் மற்றும் அனல்காற்றின் தாக்கம் குறையும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த ஆண்டில் முதல் முறையாக நேற்று மட்டும் 17 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிக அளவாவாக திருத்தணியில் 112 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications