காட்பாடி-விழுப்புரம், திருவண்ணாமலை உள்பட 12 வழித்தட நிதி திருப்பி அனுப்பப்பட்டதா? ரயில்வே விளக்கம்
சென்னை: அருப்புக்கோட்டை வழியாக மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய வழித்தடம் (2024-25-ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.55.16 கோடி), காட்பாடி-விழுப்புரம் இரட்டை ரயில் பாதை திட்டம் (ரூ.200 கோடி), சேலம்-திண்டுக்கல் (ரூ.100 கோடி), ஈரோடு-கரூர் (ரூ.100 கோடி) இரட்டை ரயில் பாதை திட்டம் உள்பட 12 திட்டங்களுக்கான நிதியை தெற்கு ரயில்வே வேண்டாம் என்று திருப்பி அனுப்பியதாக செய்திகள் வெளியானது. இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள தெற்கு ரயில்வே, நிதி திருப்பி அனுப்பியதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று விரிவான விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தின் உயர்நாடியாக ரயில்வே சேவைகள் உள்ளன. பல லட்சம் பேர் தினமும் ரயில்சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். லாபகரமான ரயில் சேவைகள் அதிகம் கொண்டதாக தெற்கு ரயில்வே உள்ளது. தமிழ்நாட்டின் எந்த ரயில் வழித்தடத்தில் புதிய ரயில் விட்டாலும், பணம் கொட்டும். ஆனால் ரயில்கள் போதிய அளவு இல்லை என்பது கசப்பான உண்மை. எனினும் அவ்வப்போது தமிழகத்துக்கு புதிய ரயில் திட்டங்கள், ஏற்கனவே உள்ள வழித்தடம் நீட்டிப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன. 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6 ஆயிரத்து 626 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

காட்பாடி-விழுப்புரம்
இந்நிலையில் அருப்புக்கோட்டை வழியாக மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய வழித்தடம் (2024-25-ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.55.16 கோடி), காட்பாடி-விழுப்புரம் இரட்டை ரயில் பாதை திட்டம் (ரூ.200 கோடி), இதேபோல சேலம்-திண்டுக்கல் (ரூ.100 கோடி), ஈரோடு-கரூர் (ரூ.100 கோடி) இரட்டை ரயில் பாதை திட்டம், திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை வழித்தடம் (ரூ.42.7 கோடி), சென்னை-கடலூர்-மாமல்லபுரம் வழித்தடம் (ரூ.52.13 கோடி) உள்பட 12 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.728 கோடியை தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்திடம் திரும்ப ஒப்படைத்ததாக நேற்று தகவல் வெளியாகியது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தெற்கு ரயில்வேக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
ரயில்வே மறுப்பு
ஆனால் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள தெற்கு ரயில்வே விரிவான விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் ரயில்வே வாரியத்துக்கு, தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பியதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் அதன் பயன்பாடு ஒவ்வொரு காலாண்டுக்கும் வேறுபடும்.
காலாண்டு தொகை
ரயில்வே வாரியத்தால் காலாண்டுக்கு விடுவிக்கப்பட்ட தொகையானது திட்டத்தின் களநிலவரம், திட்டத்தின் திறன் ஆகியவற்றை பொறுத்து பயன்படுத்தப்படும். காலாண்டுக்கு விடுவிக்கப்பட்ட தொகையும், திட்டத்தின் மதிப்பீடும் வேறுபட்டதாக இருந்தால் அந்த திட்டத்திற்கு அதிக நிதி தேவை என்று அர்த்தம். ஒவ்வொரு திட்டமும் அதற்காக ஒதுக்கப்படும் நிதியை பொறுத்துதான் செயல்படுத்தப்படும்.
அடுத்த காலாண்டுக்கு பயன்படுத்துவோம்
திட்டத்திற்கான வழித்தடத்தை இறுதி செய்தல், விரிவான திட்ட அறிக்கைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்குதல், மாநில அரசு உதவியுடன் நிலம் கையகப்படுத்துதல் என எந்த திட்டமும் நிதியை பயன்படுத்துவதன் மூலமே செயல்படுத்தப்படும். தமிழகம் மற்றும் கேரளாவில் சில திட்டங்கள் பல்வேறு கட்டங்களை எட்டியுள்ளது. இதற்கிடையே, தற்போதைய காலாண்டில் பயன்படுத்தாத நிதி அடுத்த காலாண்டுக்கு மாற்றுவது வழக்கமாக நடைபெறும் நடைமுறைதான். அதனாலேயே குறிப்பிட்ட நிதி அடுத்த காலாண்டுக்கு பயன்படுத்தப்படும் சூழலில் அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
வழக்கமான செயல்முறை
மண்டல ரயில்வே நிர்வாகம், ரயில்வே வாரியத்துக்கும் இடையிலான நிதி பறிமாற்றம் என்பது வழக்கமான செயல்முறையாகும். தேசிய வளங்களை திறம்பட கையாள்வதை அது நோக்கமாக கொண்டுள்ளது. இந்திய ரயில்வேயில் நிதி பற்றாக்குறை இல்லை. தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதியை தேவைப்படும்போதெல்லாம் பெற்று வருகிறோம். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதை தெற்கு ரயில்வே இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications