Nellai Kavin murder: கவினின் காதலியிடம் சிபிசிஐடி விசாரணை! கண்ணீர் விட்டு கதறியபடியே சுபாஷினி பதில்
சென்னை: நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் காதலியிடம் சிபிசிஐடி 2 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது காதலனை நினைத்து அழுதபடியே பதில் சொன்னாராம். அவரிடம் சென்னையில் இருந்த கவினை நெல்லைக்கு அழைத்தது யார் என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது.

சென்னையில் ஐடி ஊழியராக பணியாற்றி வந்த தூத்துக்குடி இளைஞர் கவின்குமார், நெல்லையில் அவருடைய காதலியின் தம்பியால் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் கவினின் பெற்றோர் புகாரின் பேரில் சுர்ஜித் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அது போல் காவல் துறையில் எஸ்.ஐ.க்களாக இருந்த தாயும் தந்தையும் காவல் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருடைய தாயை மட்டும் கைது செய்யாதது ஏன் என்ற கோரிக்கை எழுந்தது.
காதல்
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கவினின் காதலி சுபாஷினி, சில விளக்கங்களை வீடியோவில் அளித்திருந்தார். அதில் "நானும் கவினும் உண்மையாக காதலிச்சோம். செட்டில் ஆக நேரம் தேவைப்பட்டது என கவின் சொன்னதால் நான் என் வீட்டில் எங்கள் காதலை சொல்லவில்லை.
பெண் பார்க்க வர சொன்ன சுர்ஜித்
அதற்குள் சுர்ஜித், கவினை அழைத்து பெண் பார்க்க வரச் சொல்லி பேசியுள்ளான். கவினும் சுர்ஜித்தும் எங்கள் திருமணம் குறித்து பேசியதாகவே எனக்கு தெரியும். நான் சிகிச்சைக்காக வந்திருந்த கவினுடைய குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தேன். அதற்குள் அப்படியொரு விஷயம் நடந்துவிட்டது. இது எதுவும் தெரியாமல் யாரும் வதந்தியை பரப்பாதீர்கள். தோன்றுவதை எல்லாம் பேசாதீர்கள். என் அப்பா, அம்மாவிற்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சுபாஷினியிடம் விசாரணை
இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் சுபாஷினியிடம் சிபிசிஐடி போலீஸார் 2 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர். அப்போது கவினின் நினைப்பால் அவர் அழுதபடியே பதில் அளித்தார். அவரிடம் கவினை நெல்லைக்கு அழைத்தது யார், இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது? உள்ளிட்ட கேள்விகளை சிபிசிஐடி எழுப்பியது.
நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் தெற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (27). கவினும், நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த சுபாஷினியும் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே நண்பர்களாம். இருவருக்கும் காதல் ஏற்பட்டு அது கல்லூரிக்குச் சென்றும் நீடித்ததாம்.
வெவ்வேறு சமூகம்
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் கவினின் காதலுக்கு சுபாஷினியின் தம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருவரிடமும் இந்த காதலை பெற்றோர் ஏற்க மாட்டார்கள். எனவே இருவரும் மறந்துவிடுங்கள் என்றெல்லாம் கூறினாராம். ஆனால் அதை கேட்காமல் இருவரும் பழகியதாக சொல்லப்படுகிறது.
சித்த மருத்துவர்
சுபாஷினி சித்த மருத்துவர் என்பதால் அவர் பணியாற்றி வந்த மருத்துவமனைக்கு தனது உறவினர்களை சிகிச்சைக்கு அழைத்து வருவது போல் வந்து சுபாஷினியுடன் கவின் பேசிவிட்டு செல்வாராம். இவர் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாராம். சம்பவத்தன்று கூட, அதாவது கடந்த ஜூலை 27ஆம் தேதி , சுபாஷினியின் மருத்துவமனையில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனராம். இதை யாரோ பார்த்துவிட்டு சுர்ஜித்திடம் சொன்னதால் அவர் ஆத்திரமடைந்ததாக சொல்லப்படுகிறது.
சுர்ஜித்
உடனே கவின் வரும் வழியை தெரிந்து கொண்டு அங்கு காத்திருந்த சுர்ஜித், அவரிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்துச் சென்று, அவர் கண்களில் மிளகாய் பொடி தூவி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாராம். இதையடுத்து சுர்ஜித், அங்குள்ள காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டார். அது போல் அவருடைய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார். கவினின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications