திமுகவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கு முக்கியப் பதவி! மாஜி அமைச்சர் அப்செட்! பின்னணி என்ன?
சென்னை: திமுக மகளிரணியின் மாநில துணைச் செயலாளராக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை திமுக சட்ட திட்ட விதி 18, 19 பிரிவுகளின் கீழ் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இதனிடையே திமுக மகளிரணியில் செயலாளர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசிக்கு மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 1ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! எதற்காக இந்த மீட்டிங் தெரியுமா?
திமுக மகளிர் அணி
பரபரப்பான அரசியல் சூழலில் திமுக மகளிரணிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார் அமைச்சர் துரைமுருகன். அந்த அறிவிப்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திமுக மகளிர் அணியின் மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்படுவதாக கூறியிருக்கிறார். ஆசிரியையாக இருந்து அரசியலுக்கு வந்த கயல்விழி செல்வராஜ், கடந்த சட்டமன்றட் தேர்தலில் பாஜகவின் எல்.முருகனை தாராபுரத்தில் தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் தொண்டர் அணி
கனிமொழி வகித்த திமுக மகளிரணிச் செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என நம்பிக்கையுடன் எதிர்பார்த்த முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசிக்கு, மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் அப்செட் ஆனதாக கூறப்படும் நிலையில், அது குறித்து அவர் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
முக்கியப் பிரமுகர்கள்
இதேபோல் திமுக மகளிர் தொண்டர் அணி மாநில துணைச் செயலாளர்களாக, ரேகா பிரியதர்ஷினியும், அதிமுகவிலிருந்து அண்மையில் திமுகவில் இணைந்த விஜிலா சத்யானந்தும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதேபோல் மகளிரணி பிரச்சாரக்குழு செயலாளர்களாக சேலம் சுஜாதா, அமலு எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்களாக எம்.டி. மருத்துவம் படித்து வரும் யாழினி என்பவரும், நாமக்கல்லை சேர்ந்த ரியா என்பவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
லிஸ்டில் புதுமுகம்
திமுக மகளிரணி அமைப்பு பதவிகளில் முடிந்த வரை புது முகங்களுக்கு வாய்ப்பு பெற்றுக் கொடுத்திருக்கிறார் கனிமொழி. கவிஞர் சல்மா உள்ளிட்ட முக்கிய பெண் நிர்வாகிகள் பலருக்கு மீண்டும் மகளிரணியில் வாய்ப்புக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.