புழல் பெண்கள் சிறையில் குஷ்பு இன்று திடீர் ஆய்வு! கைதிகள் தயாரித்த பொருட்களை பார்வையிட்டு பாராட்டு!
சென்னை: நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, புழல் பெண்கள் சிறையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெண் கைதிகள் சிறையில் தயாரித்த பொருட்களை பார்த்து அவர்களை அழைத்து பாராட்டவும் செய்தார்.
இதனிடையே குஷ்புவை பார்த்ததும் பெண் கைதிகள் உற்சாகம் அடைந்ததோடு தங்களின் நிலை குறித்து எடுத்துக் கூறினர். இதனிடையே அவர்களுக்கு நம்பிக்கையும், ஆறுதலும் அளிக்கும் வகையில் பேசிய குஷ்பு, பெண் கைதிகளுக்கு புது வாழ்க்கை அமைத்துக் கொடுப்பது பற்றி ஜெயிலர் உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திப்பது சில நேரங்களில் தவிர்க்க முடியாத ஒன்று என்றும் அதையும் கடக்க கற்றுக் கொண்டு துணிச்சலுடன் வாழ்வதற்கு வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என பெண் கைதிகளுக்கு குஷ்பு அறிவுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து புழல் பெண்கள் சிறையில் ஆய்வு நடத்தியது பற்றிய கூறிய அவர், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற அடிப்படையில் பெண்கள் சிறைக்கு ஆய்வு நடத்த சென்றதாக தெரிவித்தார்.
மேலும், பெண்கள் சிறையில் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்கள் குறித்து கேட்டறிந்ததாகவும் தாம் எதிர்பார்த்ததை விட பெண் கைதிகள் சிறையை சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என பாராட்டினார். கைதிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவது பற்றி ஜெயிலருடன் விரிவான ஆலோசனை நடத்தியதாகவும் தனக்கு தோன்றிய யோசனைகளை சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
மணிப்பூர் கொடூரம் தொடர்பாக குஷ்புவுக்கு அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்ட திமுகவினர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அவரது புழல் பெண்கள் சிறை விசிட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications