காங்கிரஸ் கட்சியில் யாருக்கும் மூளையில்லை... ஆறு வருடமாக அங்கே எனக்கு மரியாதையில்லை - குஷ்பு
காங்கிரஸ் கட்சியில் என்னை வெறும் நடிகையாக மட்டுமே பார்த்திருக்கின்றனர். ஆறு ஆண்டுகள் கடுமையாக உழைத்த எனக்கு அங்கே மரியாதை இல்லை என்பதால் பாஜகவில் இணைந்ததாக கூறியுள்ளார் நடிகை குஷ்பு.
சென்னை: காங்கிரஸ் கட்சியில் ஆறு ஆண்டுகள் கடுமையாக உழைத்தும் என்னை வெறும் நடிகையாக மட்டுமே பார்த்திருக்கின்றனர். அந்த கட்சியில் இருந்த போதும் விட்டு விலகிய பின்னரும் மரியாதை இல்லை என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நான் கண்டிப்பாக பதிலடி தருவேன் என்றும் கூறியுள்ளார்.
ஆறு ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய குஷ்பு நேற்று அந்த கட்சியில் இருந்து விலகினார். டெல்லி சென்று பாஜகவில் இணைந்த குஷ்பு, பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பாராட்டினார். நாட்டினை பிரதமர் மோடி வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதாக கூறினார்.
மாற்றம் என்பது மனித இயல்புதான். கட்சியில்தான் மாற்றமே தவிர கொள்கையில் ஒருபோதும் மாற்றமில்லை என்று கூறிய குஷ்பு, தமிழகத்தில் பாஜக ஆட்சி வருவதற்கு தீவிரமாக பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.

எதிர்கட்சி
பாஜக தலைவர்கள் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்று கூறிய குஷ்பு, ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்ததால் தானும் பதிவிட்டதாக கூறினார். எதிர்கட்சியாக இருந்த போது தன்னுடைய செயல்பாடுகள் கட்சி தலைமைக்கு ஆதரவாக இருந்ததாக தெரிவித்தார்.

நல்லது செய்யும் கட்சி
காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிய குஷ்பு, தான் எதிர்கட்சியாக இருந்த போது பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை பாராட்டியிருப்பதாக கூறியுள்ளார். மக்களுக்கு எந்த கட்சி நல்லது செய்யும் என்று போக போக புரிந்து கொண்டதாக தெரிவித்தார்.

எல். முருகனுக்கு நன்றி
டெல்லியில் இருந்து குஷ்பு இன்று சென்னை திரும்பினார் அவருக்கு பாஜக தொண்டர்கள் ஆள் உயர மாலை அணிவித்தும் பூக்களை தூவியும் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். அவர்களின் வரவேற்பில் மகிழ்ந்த குஷ்பு, தன்னை பாஜகவில் இணைத்த மாநில தலைவர் எல். முருகனுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

மூளை வளர்ச்சியில்லை
காங்கிரஸ் கட்சியில் ஆறு ஆண்டுகாலம் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறேன். தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறேன். என்னை வெறும் நடிகையாக மட்டுமே பார்த்திருக்கின்றனர். அங்கே எனக்கு மரியாதையே இல்லை. காங்கிரஸ் கட்சியில் மூளை வளர்ச்சி இல்லாதவர்கள் அதிகம் இருக்கின்றனர்.

மரியாதை தராத கட்சி
பாஜக மாநில தலைவர் எல். முருகன் எல்லோரையும் கட்சியில் இணைய சொல்லி அழைக்கிறார். கட்சிக்கு நல்லது செய்யும் என்று புரிய வைத்து அனைவரையும் கட்சியில் இணைக்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்த போது மரியாதை இல்லை. கட்சியை விட்டு வெளியே வந்த போதும் மரியாதை இல்லை.

குற்றச்சாட்டுகளுக்கு பதில்
திமுகவில் இருந்து வெளியே வந்த போது நான் எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. அதே போல காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த போதும் நான் யாரையும் குறை சொல்லவில்லை. நான் அந்த கட்சியில் இருந்தவரை என்னுடைய மதிப்பு அங்கே இருந்தவர்களுக்கு தெரியவில்லை. நான் வெளியே வந்த பின்னர்தான் என்னுடைய மதிப்பு தெரிந்துள்ளது. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நான் கண்டிப்பாக பதிலடி தருவேன் என்று கூறியுள்ளார் குஷ்பு.












Click it and Unblock the Notifications