கிளாம்பாக்கம், ரேஷன் கார்டு.. திமுக அரசுக்கு சிக்கலாகும் இரண்டு பெரிய விஷயம்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையமும், ரேஷன் கார்டு விவகாரமும் திமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.. கிளாம்பாக்கம் திறந்தது முதலே பல்வேறு பிரச்சனைகளை கிளப்பி வருகிறாரகள். மறுபுறம் புதிய ரேஷன் கார்டுகள் கிடைக்காதது ஒரு புறம் எனில், மகளிர் உரிமை தொகை, வெள்ள நிவாரணம், கைரேகை என அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகள் அத்தனையும் திமுகவிற்கு சாதகமாக உள்ள நிலையில், அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் திமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பாக அரசியல் நோக்கர்கள் கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது முதலே பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விமான நிலையத்திற்கு நிகராக அழகிய வடிமைப்புடன் கட்டப்பட்டிருந்தாலும், அது அமைந்திருக்கும் தூரம் உண்மையில் பலருக்கு கசப்பான மனநிலையை ஏற்படுத்தி உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறக்க முடிவு செய்த அரசு அங்கு மேம்பாலமும், ரயில் நிலையமும் வந்த பிறகு அமைத்திருந்தால் இவ்வளவு பெரிய சிக்கல் வந்திருக்காது. அப்படி செய்யாமல் அதற்கு முன்பே திறந்த காரணத்தால் அது திமுக அரசு மீது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது
கிளாம்பாக்கம் திறக்கப்பட்டால் வண்டலூர் முதல் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி மற்றும் பொத்தேரி வரை கடுமையான நெரிசல் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியான சூழலில் சிக்னல்கள் இல்லாத நிலையை ஏற்படுத்த ஊரப்பாக்கத்தில் மேம்பாலத்தை அமைத்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதை செய்திருந்தால் கூட சிக்கல் குறைந்திருக்கும்.
இதேபோல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்த ஆண்டு 2018, அப்போதே ரயில் நிலையத்தை அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டிருந்தால், இந்நேரம் ரயில் நிலையமும் அமைக்கப்பட்டு நடைமேம்பாலமும் அமைக்கப்பட்டு மக்கள் எளிதாக செல்வதற்கு வசதி வந்திருக்கும். அதை தெற்கு ரயில்வே செய்யவில்லை.. இந்த இரண்டு பிரச்சனையும் தீர்ந்தாலே கிளாம்பாக்கம் குறித்த சர்ச்சைகளே வந்திருக்காது.
இதேபோல் கிளாம்பாக்கம் என்று இல்லை..கோயம்பேடாக இருந்தாலும் முகூர்த்த நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
தை மாதத்தில் வந்த கடைசி வளர்பிறை சுப முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி விடுமுறை தினம் கிளாம்பாக்கத்தில் பஸ் நிலையத்திற்கு கடந்த இரண்டு நாட்களாக ஏராளமான பயணிகள் வருகை தந்தனர். அங்கு 6 மணி நேரம் காத்திருந்தும் கடலூர், சிதம்பரம், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருவண்ணாமலை, வந்தவாசி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்கான போதிய பஸ்கள் இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இனி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் அதிகப்படியான பேருந்துகளை இயக்க வேண்டியது கட்டாயமாகி உள்ளது. ஏனெனில் தமிழ்நாட்டில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் நம்பி இருப்பது அரசு பேருந்துகளை தான்.. எனவே அரசு இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் கிளாம்பாக்கத்தால் அசவுகரியத்தை சந்திக்கும் மக்களிடையே, தேர்தல் நேரம் என்பதால் அரசுக்கு எதிராக பிரச்சாரங்களும் முன்னெடுக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.. கிளாம்பாக்கம் என்பது இப்போது எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் அரசியல் செய்யும் இடம் என்கிற அளவிற்கு மாறி உள்ளது.
கிளாம்பாக்கம் இப்படி என்றால் ரேஷன் கார்டும் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் விவகாரமாகி வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகள் மூலமாக இந்த கார்டுகளுக்க உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டைகள் மூலம் 7 கோடியே 52 ஆயிரத்து 847 பேர் பயன் அடைந்து வருகிறார்கள். இவர்களில் 6 கோடியே 96 லட்சத்து 49 ஆயிரத்து 842 பேர் தங்களது ஆதார் எண்ணை இணைத்திருக்கிறார்கள்.
இப்போது ரேஷன் கார்டில் என்ன பிரச்சனை என்றால், மகளிர் உரிமை தொகை. விண்ணப்பித்த பல லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்ககவில்லை.அது ஒருபுறம் எனில், ரேஷன் கார்டு இல்லாததை காரணம் காட்டி பலருக்கும் வெள்ள நிவாரணம் கிடைக்கவில்லை.. இதேபோல் வெளியூர் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கும் வெள்ள நிவாரணம் சென்னையில் கிடைக்கவில்லை.. அதேபோல் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டும் இன்று வரை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.. இதெல்லாம் திமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
இது ஒருபுறம் எனில், 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுவதால், உணவுப்பொருள் வழங்கும் திட்டம் கணினிமயமாக்கப்பட்டு உள்ளது. ரேஷன் பொருட்களும் கைரேகை பதிவு மூலம் வழங்கப்படுவதால் யார் வேண்டுமானாலும் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்க முடியும் என்கிற நிலை உள்ளது.
அரசு மானிய விலையில் அளிக்கப்படும் பொருட்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்வதற்காக வங்கிகளில் வாடிக்கையாளர்களின் விவரங்களை தெரிந்து கொள்வதற்கான வசதி (கே.ஒய்.சி.) மேற்கொள்ளப்படுவதை போன்று ரேஷன் கடைகளிலும் பயனாளிகளின் விவரங்களை முழுமையாக பதிவு செய்து வைத்துக்கொள்வதுடன் அவர்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள ரேஷன் அட்டையில் உள்ளவர்கள் (குறிப்பாக அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களின்) அனைவரின் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது..

இது புதிய அறிவிப்பு அல்ல.. கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட போதிலும், இடையில் அது சரி வர நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி ரேஷன் அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சுய விவரங்களை வெள்ளைத்தாளில் அளிப்பதுடன் விரல் ரேகை சரிபார்ப்பு இம்மாத இறுதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் குடும்ப உறுப்பினர் பெயர் நீக்கப்படும் என்று செய்திகள் வெளியானது. ரேஷன் கார்டில் பெயர்கள் நீக்கப்படும் என்றும், ரேஷன் கார்டும் ரத்து செய்யப்பட உள்ளதாகவும் செய்திகளை சிலர் பரப்பி விட்டனர். இந்த வதந்தி காட்டுத்தீ போல பரவி உள்ளது.
ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதோ, பெயர்கள் நீக்கப்படுவதை அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.. அதையே அரசு செய்யப் போவதாக வதந்தி பரவியது.. இது உண்மை இல்லை என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மறுப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசே தெளிவான விளக்கத்துடன் மறுத்துள்ளது. ரேஷன் கார்டு விவகாரத்தில் நடக்கும் எந்த பிரச்சனை பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற நிலையில், ஆளும் அரசுக்கு எதிராக மிகப்பெரிய பிரச்சனையாக மாறும் என்பதால் இதிலும் வதந்திகள் பரவாத அளவிற்கு அரசு கவனமாக இருக்க வேண்டும்.. கிளாம்பாக்கம் மற்றும் ரேஷன் கார்டு விவகாரங்களில் அதிகாரிகள் மிக கவனமாக இல்லாவிட்டால், சிக்கலாகும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications