மற்றொரு பெருங்களத்தூர் சந்திப்பா கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்.. தவிக்கும் பயணிகள்.. என்ன பிரச்சனை?
சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் மற்றொரு பெருங்களத்தூர் சந்திப்பாக மாறும் அபாயம் இருப்பதாக பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். சர்வீஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் வாகனங்கள் ஒரே நேரத்தில் பஸ் நிலையத்திற்குள் நுழைவதால் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் ஸ்தம்பிக்கும் அபாயம் இருக்கிறது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்துது நிலையம் அமைக்கும் பணி நடந்து வந்தது. 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.397 கோடி மதிப்பில் 2018-ம் ஆண்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டது. கோயம்பேடு போல் இல்லாமல், பேருந்துகளை நெரிசல் இன்றி நிறுத்தவும், பயணிகள் எளிதாக பயணம் செய்யும் வகையிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அதிநவீன வசதியுடன் அழகிய வடிவத்தில் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. நிலையத்தில் இருந்து தென்மாவட்டத்துக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்படுகிறது.

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டின் உள்ளே நுழைய மாநகர பஸ்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் விரைவு பஸ்களுக்கு தனித்தனி வாயில்கள் உள்ளன. மேலும் இந்த 2 பஸ்களும் நிறுத்தும் இடங்களுக்கு இடையேயான தூரம் அதிகம் இருக்கிறது. இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் மாநகர பஸ்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
இது ஒருபுறம் எனில் பயணிகள் விரைவு பஸ்களில் ஏற்கனவே கோயம்பேடு வரை டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். கிளாம்பாக்கத்தில் இறக்கி விடப்படுவதால் அவர்கள் டிரைவர், கண்டக்டர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் நடந்தது. இதேபோல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறங்கிய பயணிகள் வடசென்னை பகுதிகளுக்கு செல்ல, ஆபத்தான முறையில் ஜி.எஸ்.டி. சாலையை கடந்து செல்கின்றனர். இதனால் விபத்து அபாயம் இருக்கிறது. எனவே இந்த பகுதியில் நடை மேம்பாலம் உடனடியாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் ஆட்டோக்கள், கார்கள் நிறுத்த இடம் உடனே ஒதுக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் வாகனங்கள் ஏற்றி இறக்குவது சாலைகளில் தான் நடக்கிறது. இப்படி தொடர்ந்தால் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
இது ஒருபுறம் எனில், சர்வீஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் வாகனங்கள் ஒரே நேரத்தில் பஸ் நிலையத்திற்குள் நுழைகின்றன. இப்படியே தொடர்ந்தால் பொங்கல் சமயத்தில் கடும் நெரிசல்ஏற்பட வாய்ப்பு உள்ளது. பஸ் நிலையம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பஸ்கள் எளிதில் சென்று வர ஏற்பாடு செய்யாவிட்டடால் மற்றொரு பெருங்களத்தூர் சந்திப்பாக மாறும் அபாயம் உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உணவு மற்றும் அடிப்படை தேவைகள் இன்னமும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. குடிநீர்கள் குழாய்களில வராத நிலை இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். இதனிடையே பயணிகள் ஆபத்தான முறையில் ஜி.எஸ்.டி. சாலையில் பயணிகள் சாலையைக் கடக்கும் நிலையில், பஸ்நிலையத்திற்கு பயணிகள் பாதுகாப்பாக வந்து சேரவும் அப்பகுதியில் போக்குவரத்து காவலர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்பகுதியில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications