25% கூடுதல் செலவு வேற.. திட்டமிடாத பணியால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பில் சிக்கல் - சேகர்பாபு
சென்னை: சென்னை புறநகரில் கிளாம்பாக்கத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம் திறப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் தான் முறையான திட்டமிடல் இன்றி பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் உள்ளதாகவும், கூடுதலாக 25 சதவீதம் வரை நிதி செலவிட வேண்டி உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கிளாம்பாக்கத்தில் பிரமாண்டமாக பஸ் நிறுத்தத்துடன் கூடிய முனையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் முனையம் கட்டும் பணி தொடங்கியது.

இந்த பணி முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பொங்கல் பண்டிகைக்கே இந்த பஸ் முனையம் திறக்கப்பட்டு விடும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து பஸ் நிலையம் திறப்பு பணி தள்ளிப்போய் வருகிறது.
பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து மழைநீர் வெளியேறாத நிலை உள்ளது. இதுதான் திறப்பு விழா தள்ளிப்போவதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையின்போது பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கின.
இதனால் தற்போது மழை நீர் வெளியேறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நீக்கி பஸ் நிலையத்தை புதுப்பொலிவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை விரைந்து கொண்டு வருவதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறார்.
இந்நிலையில் தான் சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை சரியான திட்டமிடலுடன் கட்டவில்லை என குண்டை தூக்கி போட்டுள்ளார். இதுதொடர்பாக சேகர்பாபு கூறியதாவது:
கிளாம்பாக்கம் பஸ் நிலைய பணிகள் விரைவாக நடந்து வருகிறது. வடிகால்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் வகையிலான பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகள் ரூ.15 கோடி செலவில் நடக்கிறது. கடந்த காலத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திட்டமிடாமல் அமைத்துள்ளனர். இதனால் ஒதுக்கீடு செய்ததை விட கூடுதலாக 25 சதவீத தொகை வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications