இனிமே இவர்களை ஒதுக்காதீங்க! எல்ஜிபிடிக்யூ பேரணியில் கிருத்திகா உதயநிதி ஒரே போடு.. துணிச்சல் பேச்சு!
சென்னை: சென்னையில் நடைபெற்ற LGBTQ+ பிரிவினரின் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் மனைவி இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
எல்ஜிபிடிக்யூ + சமூகத்தினர் என்பவர்கள் தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கையர்கள், திருநம்பிகள், பல பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் இருபாலின சமூகத்தினர் என்று பாலின வேறுபாடுகளை உள்ளடக்கிய குழுவாகும்.
பாலியல் அல்லது பால் உணர்வு என்பது ஒரு ஆண் - பெண்ணிற்கு இடையில் மட்டும் ஏற்படுவது கிடையாது. இந்த உணர்வு எப்படி வேண்டுமானாலும் ஏற்படலாம்.

LGBTQ+
அதாவது ஆணுக்கும், ஆணுக்கும் இடையில், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படலாம். ஒரே நபருக்கு ஆண், பெண் இருவர் மீதும் ஏற்படலாம். சிலருக்கு பால் உணர்வுகளே ஏற்படாமல் இருக்கலாம். சிலருக்கு தங்களின் பாலுணர்வு அவ்வப்போது மாறுபடவும் வாய்ப்புகள் உள்ளன. இப்படி பல பிரிவினர்களை உள்ளடக்கியதுதான் எல்ஜிபிடிக்யூ +. இவர்களின் பாலுணர்வுகளை இன்னமும் பலர் புரிந்து கொள்வது இல்லை.

பிரைட் மாதம்
இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட எல்ஜிபிடிக்யூ + பிரிவினர் தங்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். இவர்கள் எப்போதும் ஜூன் மாதத்தை பிரைட் மாதம் ஆக கொண்டாடுவார்கள். ஜூன் மாதத்தை தங்களின் மாதமாக எல்ஜிபிடிக்யூவினர் கொண்டாடி வருகிறார்கள். அதாவது நாங்கள் எல்ஜிபிடிக்யூ + ஆக இருப்பதில் பெருமை அடைகிறோம் என்று இவர்கள் அடையாளப்படுத்தி வருகிறார்கள். ஜூன் மாதத்தில் ஏற்கனவே பிரைட் மார்ச் நடந்த நிலையில் நேற்று சென்னையில் எல்ஜிபிடிக்யூ + சார்பில் பெசன்ட் நகரில் பேரணி நடத்தப்பட்டது.

பேரணி
இதில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் மனைவி இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், சென்னையில் LGBTQ+ விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்று வருகிறது.இதில் கலந்து கொண்டது சந்தோசம் அளிக்கிறது. கருண் ராமன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் என்னுடன் கலந்து கொண்டனர். முதல்முறை இந்த பேரணியில் நான் கலந்து கொள்கிறேன். சென்னையில் இப்படி நிகழ்வுகள் நடப்பது பெருமை அளிக்கிறது. LGBTQ+ பிரிவினர் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். அவர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கிருத்திகா உதயநிதி
திருநங்கைகள், திரு நம்பிகள் பல சவால்களை சந்தித்து வருகின்றனர். தங்கள் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களை சந்தித்து வருகின்றனர். இவர்களுடன் உடன் நிற்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. LGBTQ+ பிரிவினர் நம்மை போன்றவர்கள். அவர்களை ஒதுக்கி வைக்க கூடாது என்று கிருத்திகா உதயநிதி தனது பேட்டியில் தெரிவித்தார். இந்த நிகழ்வில் சினிமா பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications