நவ.1-ம் தேதி தமிழ்நாடு தினம்... தமிழகத்திற்கு தனிக்கொடியை உருவாக்குக -கொங்கு ஈஸ்வரன்
சென்னை: நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்படும் நிலையில், வேறுபாடுகளை மறந்து தமிழராய் ஒன்றிணைய வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்து அதனை கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது எனக் கூறியுள்ளார்.

ஒற்றுமை
தமிழ்நாடு தினத்தை தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தினத்தை கொண்டாடுவதன் மூலம் சாதி, மத அரசியல் வேறுபாடுகளை களைந்து ஒற்றுமைப்பட முடியும் எனக் கூறியிருக்கிறார்.

கோரிக்கை
ஒற்றுமை தான் தமிழுக்கும், தமிழனுக்கும் ஒரு ஆபத்து என்றால் ஒட்டுமொத்த தமிழகமும் குரல் எழுப்புவதற்கும், போராடுவதற்கும் வாய்ப்பை உருவாக்கும் என்றும், தமிழகத்திற்கு என தனிக்கொடியை தமிழக அரசு உருவாக்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நவ.1 தமிழ்நாடு தினம்
தமிழக அரசால் உருவாக்கப்படும் தனிக்கொடியை ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பட்டொளி வீசி பறக்க வேண்டும் எனவும், இதன் மூலம் தமிழகத்தின் ஒற்றுமையை உலக அளவில் வெளிக்காட்ட முடியும் என்றும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அழைப்பு
மேலும், தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும், வேற்றுமையை மறந்து தமிழராய் ஒன்றிணைய முன்வருவோம் எனவும் ஈஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications