எல்லாம் சரி.. ராயப்பேட்டை அதிமுக கட்சி ஆபிஸுக்கு ஏன் போகமாட்றீங்க.. ஓபிஎஸ் ஆதரவாளர் அளித்த விளக்கம்
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏன் செல்லவில்லை என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதிமுக எங்களுக்குத்தான் என எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் மாறி மாறி உரிமைக் கொண்டாடி வருகிறார்கள். ஓபிஎஸ்ஸை பொருத்தவரை அதிமுக தலைமை கழகமான எம்ஜிஆர் மாளிகை தொண்டர்களுக்காக ஜானகி அம்மாள் அர்ப்பணித்தது என்கிறார்.
மேலும் அதிமுகவின் தலைமையை தேர்வு செய்யும் உரிமை தொண்டர்களுக்கே உள்ளது. இது எந்த கட்சியிலும் இல்லாத ஒரு விதியாகும். பிற்காலத்தில் அதிமுகவை தனிப்பட்ட நபர் சொந்தம் கொண்டாடிவிடக் கூடாது என்பதற்காகவே எம்ஜிஆர் இப்படி ஒரு விதியை வகுத்திருக்கிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர்களும் மூத்த நிர்வாகிகளும் கூறி வருகிறார்கள்.

அதிமுக கட்சிக் கொடி
இந்த நிலையில் அதிமுக கட்சிக் கொடியையும் பெயரையும் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு ஓபிஎஸ் பதிலளிக்கையில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் கட்சிக் கொடியையும் பெயரையும் பயன்படுத்துவதில் இருந்து யாரும் தடுக்க முடியாது என கூறியுள்ளார்.

வரவு செலவுகள்
அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் தாக்கல் செய்த நிலையில் அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. இந்த நிலையில் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திர செயல்முறை விளக்கமளிக்க வருமாறு மாநில தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு விடுத்த அழைப்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டிருந்தது. இதை ஓபிஎஸ் வரவேற்றுள்ளார். தேர்தல் ஆணையமே சொல்லிடுச்சே என தெரிவித்தார்.

அதிமுக எடப்பாடி பழனிசாமி
இப்படி அதிமுக எடப்பாடி பழனிசாமி அணிக்கு சொந்தம் இல்லை என ஓபிஎஸ் குறிப்பிட்டு வந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் மணி கூறியிருப்பதாவது: சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து மத்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு வழங்கிய கடிதத்தை திரும்ப பெற வேணடும்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை
இதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மனு அளித்துள்ளேன். நாங்கள் அளித்த மனுவுக்கு கிடைத்த வெற்றியே தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நடைமுறையை பின்பற்றி அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரை சிவி சண்முகம், கேபி முனுசாமி உள்பட அனைவரும்தான் சேர்ந்து தேர்வு செய்தார்கள்.

2026 வரை பதவிக்காலம்
அவருக்கான பதவிக்காலம் 2026 வரை ஆகும். மத்திய அரசு இடைக்கால பொதுச் செயலாளர் என்று வழங்கியிருக்கும் கடிதத்தில் உள்ள குழப்பத்தை தேர்தல் ஆணையத்தில் வைத்தே சரி செய்து கொள்ள வேண்டும். சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை சென்று கொண்டிருப்பதாலேயே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவின் தலைமை கழகம் செல்லவில்லை. தேர்தல் ஆணையம் கொடுத்த அழைப்பை ஏற்று 16 ஆம் தேதி அதிமுக சார்பில் ஓபிஎஸ் பிரதிநிதி தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications