திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஈஸ்வரன் முக்கிய யோசனை! சேகர்பாபுவை போல் எல்லோரும் இருக்கணும்!
திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும் கொங்கு ஈஸ்வரன் கொடுக்கும் யோசனை.
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்களும், மாவட்ட அமைச்சர்களும் செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
இன்றைய தலைமுறைக்கு முதலமைச்சர் ஸ்டாலினின் வளர்ச்சியை பற்றி முழுமையாக தெரியாமல் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த புகைப்பட கண்காட்சி அவர் பட்ட துயரங்களையும், படிபடியாக மெருகேற்றிக்கொண்டு முன்னேறியதையும் விளக்கும் எனத் தெரிவித்துள்ளார் ஈஸ்வரன்.

சூப்பர் சேகர்பாபு
தமிழ்நாடு முதலமைச்சரின் இளமை காலம் தொட்டு இன்று வரை வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை கோர்வையாக, முறையாக ஒன்று சேர்த்து புகைப்படங்கள் வாயிலாக உலகத் தமிழர்கள் அனைவருக்கும் புரியும்படியாக சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்படம் கண்காட்சியை ஏற்பாடு செய்து பொதுமக்கள் பார்க்க வழி வகுத்த இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டாலினின் வளர்ச்சி
இன்றைய தலைமுறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் வளர்ச்சியை பற்றி முழுமையாக தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த முதலமைச்சர் பொறுப்புக்கு வரும் வரை அவர் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து வந்தார் என்பதை இந்த புகைப்பட கண்காட்சி தெளிவாக விளக்குகிறது. ஒரு பக்கம் முதலமைச்சருடைய கடந்து வந்த பாதையை இது தெரிவித்தாலும் இளைஞர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் தங்களுடைய வாழ்க்கை பயணத்தில் பல்வேறு சிரமங்களை தாண்டிதான் லட்சியத்தை அடைய முடியும் என்பதை உணர்த்துவதாக இருக்கும்.

அரிய வாய்ப்பு
ஒரு உயர்ந்த லட்சியத்தை அடைய வேண்டுமென்றால் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை புரிய வைப்பதாக இருக்கின்றது. கால சூழ்நிலைக்கு தகுந்தவாறு தைரியத்தை வரவழைத்து தன்னுடைய செயல்பாடுகளை மெருகேற்றிக்கொண்டு முன்னேறி வந்ததை இந்த புகைப்பட கண்காட்சி தெள்ளத்தெளிவாக விளக்குகிறது. சென்னையில் வாழுகின்ற மக்களுக்கும், சென்னைக்கு பயணிப்பவர்களுக்கும் இந்த அரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தோடு இது நின்று விடக்கூடாது.

மாவட்ட செயலாளர்கள்
ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த புகைப்பட கண்காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்களும், மாவட்ட அமைச்சர்களும் செய்தார்கள் என்றால் மொத்த தமிழகத்திற்கும் இது சென்று சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் மக்கள் தங்களை ஆளுகின்ற முதலமைச்சர் எப்படிப்பட்டவர் எப்படிப்பட்ட கட்டங்களை தாண்டி வந்தார் என்பதை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

ஸ்டாலினின் அனுபவம்
அது தேவையானது என்று நான் கருதுகிறேன். இதற்கான முயற்சிகளை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக வைத்து கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சருடைய இந்த அனுபவம் தான் இன்றைக்கு ஒரு பண்பட்டவராக தன்னை நோக்கி வருகிற விமர்சனங்களையும், பாராட்டுகளையும் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி எடுத்துக் கொண்டு செயல்பட வாய்ப்பளித்திருக்கிறது என்று கருதுகிறேன்.

சேகர் பாபுவுக்கு பாராட்டு
தன்னை முன்னிலை படுத்தாமல் தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்துகிற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புகைப்பட கண்காட்சிக்கு திட்டமிட்டு இவ்வளவு வெற்றிகரமாக நடத்திக்காட்டிருக்கிற மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேகர் பாபு அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications