சிறு குறு நடுத்தரத் தொழில்! முதல்வரின் நடவடிக்கைகள் நம்பிக்கை தருகின்றன! கொங்கு ஈஸ்வரன் பாராட்டு மழை
சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடைய இன்றைய நிலையையும், நிறுவனங்கள் படுகின்ற சிரமத்தையும் முதலமைச்சர் புரிந்து கொண்டுள்ளதாக கொமதேக பொதுச்செயலாளர் கொங்கு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் காப்பாற்ற மின் கட்டண மறு சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தான் முதல்வரை வலியுறுத்தியிருந்தார்.

மின் கட்டண நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தவில்லை என்று சொன்னால் பல தொழிற்சாலைகள் இயங்க வழியின்றி மூடப்படும் என்றும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் எனவும் நான்கு நாட்களுக்கு முன்னர் தான் அரசை ஈஸ்வரன் எச்சரித்திருந்தார்.
கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கை விடுத்திருந்த அவர் இன்று பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடைய ஒருநாள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அமைச்சர்களை பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டார். அமைச்சர்களும் தொழில் நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உண்மை நிலையை முதலமைச்சருக்கு தெரிவித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு கோரிக்கையாக அரசு பரிசீலித்து நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையோடு மின் நுகர்வோர் சங்கங்கள் காத்திருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக ஒரு கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மின்சார துறைக்கு அதை செயல்படுத்த உத்தரவிட்டதன் பெயரில் இன்றைக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மீதமுள்ள கோரிக்கையையும் கனிவோடு பரிசீலித்து விரைவாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சரின் துரிதமான நடவடிக்கை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications