கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு காலி.. இப்ப மார்க்கெட்டில் தலைவலி.. "நேரா என்கிட்ட வாங்க: சபாஷ் சென்னை போலீஸ்
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நாளுக்கு நாள் மர்ம நபர்களின் அட்டகாசம் பெருகி வருவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீசாரின் அதிரடி நடவடிக்கை ஆரம்பமாகியிருக்கிறது. அதிலும் இன்ஸ்பெக்டர் சொன்ன வார்த்தையை கேட்டு, பூ வியாபாரிகள் பெருமகிழ்ச்சியும், நிம்மதியும் அடைந்துள்ளனர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி சந்தை கோயம்பேடு.. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள்.. மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் என ஏராளனோர் திரண்டு வருவதால், கோயம்பேடு மார்க்கெட் இரவு 11 மணி வரை செயல்படும். அதேபோல, நள்ளிரவு 2, 3 மணிக்கெல்லாம் காய்கறிகள் லோடுகள் லாரிகளில் வந்து இறங்கும். இதனால் எப்போதுமே கோயம்பேடு பிஸியாகவே காணப்படும்.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு
முன்பு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு இருந்தபோதும் இப்படித்தான் பிசியாகவே இருந்தது.. ஆனால், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு வந்தபிறகு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு வெறிச்சோடியது.. அங்கிருந்த கடைகளும் காலி செய்யப்பட்டுவிட்டன.. சில பஸ்களே இங்கிருந்து இயக்கப்படுவதால், இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் பஸ் ஸ்டாண்டில் அதிகரிக்க துவங்கியது..
அதேபோல, கோயம்பேடு சுற்றுவட்டாரத்தில் கொள்ளையடித்துவிட்டு, இந்த பஸ் ஸ்டாண்டில் வந்து இரவு நேரத்தில் பதுங்கி கொள்கிறார்களாம் மர்ம நபர்கள்.. இதுபோக பஸ் ஏற வரும் பயணிகளிடமும் செல்போன், பர்ஸ்களை கொள்ளையடித்து விடுவதால், பயணிகளுக்கு அச்ச உணர்வு ஏற்பட்டது. இதுகுறித்த புகார்கள் போலீசுக்கு அடுக்கடுக்காக சென்றதையடுத்து, பஸ் ஸ்டாண்டில் தற்போது ஓரளவு குற்ற செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
திருட்டு சம்பவங்கள்
ஆனால், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் திருட்டு சம்பவங்கள் பெருகிவிட்டன. பூட்டிய கடைகளை உடைத்து பொருட்களை சூறையாடும் போக்கும் அவ்வப்போது நடக்கிறது..
கடந்த மாதம் 3 மர்மநபர்கள் கையில் வீச்சரிவாளுடன் பூ மார்க்கெட்டில் சுற்றி கொண்டிருந்தார்களாம். சமீப காலமாகவே இரவு நேரங்களில் கஞ்சா, மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்வது அதிகரித்து வருவதாகவும், செல்போன், பைக் திருட்டு போன்றவை அதிகரித்து விட்டதால், இவற்றை தடுக்க இரவு ரோந்திலும் போலீசார் ஈடுபட வேண்டும் என்றும் பூ வியாபாரிகள் 2 நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்தனர்.
அடுத்தடுத்த புகார்கள்
அத்துடன், கோயம்பேடு பூ மார்க்கெட் வியாபாரிகள், அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதியை நேரில் சந்தித்து புகாரும் தந்தனர்.. அந்த புகாரில், "பூ மார்க்கெட்டில் இரவு நேரங்களில் மர்ம கும்பல் அட்டகாசம் செய்துவருவதால் வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண் வியாபாரிகள் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அங்காடி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர்.
அதேபோல, அங்காடி நிர்வாகம் சார்பில் கோயம்பேடு போலீஸிலும் புகார் தரப்பட்டது. அந்த புகாரில், "கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இரவு நேரங்களில் ரோந்துபணி தீவிரப்படுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த புகார்களின் பேரில், கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இன்ஸ்பெக்டர் ராகேஷ் தலைமையில் போலீசார் நேரடி ஆய்வில் குதித்தனர்.. அங்கு நடமாடி கொண்டிருந்த சந்தேக நபர்களை விரட்டி விரட்டி துரத்தியடித்தனர்.
என்கிட்டயே புகார் சொல்லுங்க
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சொல்லும்போது, "24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள், மார்க்கெட் வளாகத்தில் உள்ள சென்னை புறநகர் காவல் நிலையத்தில் போலீசார் பணியில் ஈடுபடுவார்கள், வியாபாரிகளுக்கு பாதிப்பு வந்தால் உடனடியாக சென்னை புறநகர் போலீசாரிடம் தெரிவிக்கலாம்.
ஒருவேளை போலீசார் பணியில் இல்லை என்றால் என்னிடமே நேரடியாக புகார் சொல்லலாம். கோயம்பேடு மார்க்கெட்டில் குற்றச் சம்பவங்கள், வியாபாரிகளுக்கு பாதிப்பு விளைவிக்கும் சம்பவம் நடந்தால் இன்ஸ்பெக்டரை சந்தித்து புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மட்டற்ற மகிழ்ச்சி - நன்றி
புகார் கொடுத்த அடுத்தநாளே போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, மார்க்கெட்டில் ஆய்வு செய்து வெளியாட்களை அப்புறப்படுத்தியுள்ளதுடன், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியை தருவதாக மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications