மீண்டும் கோயம்பேடு ரெடி.. திருவண்ணாமலைக்கு போறீங்களா? இதோ சென்னையில் "85" தரும் சர்ப்ரைஸ்
சென்னை: தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. இது திருவண்ணாமலை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தமிழக போக்குவரத்து துறையை பொறுத்தவரை, பொதுமக்களின் வசதிகளை கருத்தில் கொண்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.. அதுமட்டுமல்லாமல், எப்போதுமே வார இறுதி நாட்களில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமாகும்.. இப்போது கோடை விடுமுறை என்பதால், பொதுப்போக்குவரத்துகளில் நெரிசல் அதிகமாகவே காணப்படுகிறது.

கோடை விடுமுறை: அதனால், பயணிகளின் வசதிக்காகவே தமிழக போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.. அதுமட்டுமல்லாமல், இந்த வாரம் சுபமுகூர்த்த நாட்களும் வருகிறது.
எனவே, நிறைய பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள் என்பதால், சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அந்தவகையில், நேற்று முதல் 3 நாட்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன..
குட்நியூஸ்: இந்நிலையில், இன்னொரு குட்நியூஸ் வந்துள்ளது.. அதாவது, திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள், கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருகிறார்கள்.. இவர்கள் திருவண்ணாமலை தடப்பேருந்துகளை, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கையை விடுத்தவாறே இருந்தனர்.
இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுள்ளதுடன், அதுகுறித்த அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, வரும் 23ம் தேதி முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசு: இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "தற்பொழுது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மூலமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மேற்படி தடங்களில் குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கையின் அடிப்படையில் கீழ்குறிப்பிட்டுள்ளவாறு 23/05/2024 முதல் திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் செஞ்சி வழியாக 90 மொத்தம் பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 44 பேருந்துகள் ஆற்காடு, ஆரணி வழியாகவும் மற்றும் தற்போது தினசரி கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11 பேருந்துகளுடன் 30 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.
ஆக மொத்தம் 85 பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்படும். எனவே, பயணிகள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications