எம்.ஜி.ஆரை 40 ஆண்டுகள் பாதுகாத்த கே.பி.ராமகிருஷ்ணன் மறைவு - முதல்வர் இரங்கல்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணன் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் காலமானார்.
சென்னை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணன் உடல் நலக்குறைவினால் காலமானார். அவரது மனைவி கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார். மறைந்த கே.பி.ராமகிருஷ்ணனுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். அவரது மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். சினிமாவில் சண்டைப்பயிற்சி கலைஞராகவும், எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த அனைத்து படங்களிலும் அவருக்கு டூப் போட்டு நடித்தவர் இவர்தான். ஒரு சில படங்களில் நம்பியாருக்கும் டூப் போட்டு நடித்தார்.
இவர் தனது கோபாலபுர இல்லத்தில், கடந்த டிசம்பர் 27ம் தேதி மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தார். இதில், அவரது தலையில் அடிபட்டு, மூளையில் ரத்தக் கட்டு ஏற்பட்டதால் சுயநினைவை இழந்தார்.
மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், கடந்த ஜனவரி 1ந் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தொடர் சிகிச்சையில் இருந்த கே.பி.ராமகிருஷ்ணன், சுயநினைவு திரும்பாமலேயே நேற்று உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ள முதல்வர் பழனிச்சாமி அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.
புரட்சித்தலைவர் MGR அவர்களுடன் 40 ஆண்டுகளுக்கும் மேல் பயணித்த மெய்க்காப்பாளர் திரு.K.P.ராமகிருஷ்ணன் அவர்கள் இன்று காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். pic.twitter.com/acnuofrYiv
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 3, 2021
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் 40 ஆண்டுகளுக்கும் மேல் பயணித்த மெய்க்காப்பாளர் திரு.K.P.ராமகிருஷ்ணன் அவர்கள் இன்று காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.