Exclusive: ஒசூர் -பெங்களூர் இடையே மெட்ரோ ரயில்! கர்நாடக முதல்வர் தமிழக எம்.பி.யிடம் என்ன சொன்னார்?
சென்னை: கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் நேரில் சந்தித்து பேசி பெங்களூர் -ஒசூர் இடையே மெட்ரோ ரயில் இயக்க வேண்டும் என உருக்கமுடன் கோரிக்கை வைத்து திரும்பியுள்ளார்.
கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. செல்லக்குமாரின் முயற்சிக்கு கர்நாடக முதல்வர் எந்தளவு ரெஸ்பான்ஸ் செய்தார் என்பன உள்ளிட்ட விவரங்கள் குறித்து நாம் அவரிடம் பேசினோம்.
அப்போது அவர் ஒன் இந்தியா தமிழிடம் பகிர்ந்த விவரம் பின்வருமாறு;

செல்லக்குமார் எம்.பி.
''தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள ஒசூரில் இருந்து நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பெங்களூரு நகருக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து வருபவர்களும் பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், வழிதெரியாததன் காரணமாகவும் மிகவும் இன்னலை சந்தித்து வருகின்றனர். இதனால் நான் கிருஷ்ணகிரி எம்.பி.ஆனது முதல் ஒசூர்- பெங்களூரு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறேன்.''

எல்லா முயற்சிகளும்
''டெல்லியில் இதற்காக நான் ஏறாத அலுவலகங்கள் இல்லை, பார்க்காத அதிகாரிகள் இல்லை, எழுதாத கடிதங்கள் இல்லை. ஆனாலும் இந்த திட்டத்தில் இன்னும் சிக்கல் இருந்து வருகிறது. தற்போது எலக்ட்ரானிக் சிட்டி வரை உள்ள மெட்ரோவை ஒசூர் வரை கர்நாடக அரசு நீட்டித்தால் இரு மாநில உறவுகள் வலுவடையும் என்பதோடு சாதாரண மக்களின் இன்னல் நீங்கும். கர்நாடக முதலமைச்சரின் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு பல மாதங்களாக காத்திருந்தேன். கிடைத்தபாடில்லை. இதனால் எங்கள் கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையாவை சந்தித்து விவரத்தை எடுத்துக் கூறினேன். ''

சித்தராமையா சிபாரிசு
''அவர் உடனடியாக கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் பேசி எனக்கு நேரம் பெற்றுக்கொடுத்தார். இதையடுத்து நான் மட்டும் சென்றால் அது சரியாக இருக்காது எனக்கூறி சித்த ராமையாவையும் என்னுடன் அழைத்துச்சென்று பெங்களூர் -ஒசூர் இடையேயான மெட்ரோவுக்கு பரிந்துரை செய்ய வைத்தேன். கர்நாடக முதல்வர் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார், இரு மாநில மெட்ரோ சேர்மன்களை முதற்கட்டமாக பேச வைத்து இது தொடர்பாக ஆலோசிக்க வைத்துள்ளேன்.''

தமிழக முதல்வர்
''அடுத்ததாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினையும் நேரில் சந்தித்து இது தொடர்பாக பேசவிருக்கிறேன். முதலில் பெங்களூர் -ஒசூர் இடையே மெட்ரோ ரயில் சேவையை கர்நாடக முதல்வர் ஆர்வம் காட்டவில்லை என்பது அவர் அலுவலகத்தில் இருந்து எனக்கு கடந்த மாதம் கிடைத்த கடிதத்தின் மூலம் தெரிய வந்தது. ஆனால் இப்போது நான் நேரில் சந்தித்து பேசிய பிறகு பரிசீலனை செய்யக் கூடிய கட்டத்தில் இருப்பதாக அறிகிறேன்.'' எனக் கூறினார் காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார்.

பைபாஸ் அறுவைச் சிகிச்சை
கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. செல்லகுமாரை பொறுத்தவரை அண்மையில் தான் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இதனால் அவரை மருத்துவர்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியும், பெங்களூர் -ஒசூர் இடையே எப்பாடு பட்டேனும் மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக நின்று அதைநோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications