வரிந்துகட்டி வந்த டாக்டரின் வாரிசு! ‘எத்திக்ஸ் பற்றி நீங்க பேசலாமா?’ அமைச்சர் கருத்துக்கு எதிர்ப்பு!
சென்னை : புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி அரசை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு ஆதரவாக கடந்த சில பல ஆண்டுகளாக பேசி வரும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, திமுகவை தொடர்ந்து விமர்சித்துப் பேசி வருகிறார்.
கிருஷ்ணசாமியின் மகனும் மருத்துவருமான ஷியாம் கிருஷ்ணசாமியும் அரசியல் விமர்சனங்களைக் கூறி வருகிறார். நீட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும் அவர் கருத்து கூறி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் எழுந்த டாஸ்மாக் வருமானம் தொடர்பான சர்ச்சை குறித்து விமர்சித்து ஷியாம் கிருஷ்ணசாமி ட்வீட் செய்துள்ளார்.

டாஸ்மாக் மது விற்பனை
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய மூன்று நாட்களில், ரூ.708 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக மறுத்தார். தீபாவளி முடிந்தவுடன் டாஸ்மாக் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் விற்பனை விவரம் என்று பொய்யான தகவலை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர் எனச் சாடினார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

பொய் பரப்பினால் நடவடிக்கை
மின்சாரம், மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதுதொடர்பாக ட்விட்டரில், அரசு நிறுவனங்கள் மீது தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையில் உண்மை நிலையை அறியாமலும், குறைந்தபட்ச அறம் கூட இல்லாமலும் ஊடகங்கள் செயல்படுவது தவறு. டாஸ்மாக் மீது உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பும் பத்திரிகையாளர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

கிருஷ்ணசாமி மகன்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வரிசையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்து குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

எதிக்ஸ் இல்லாமல்
ஷியாம் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தெரு தெருவா அரசே சாராய கடைய திறந்துவிட்டு 'Ethics' பற்றி எல்லாம் நீங்க பேசலாமா? அரசு சாராயம் விற்பது அசிங்கமில்லையாம், 3 நாட்களில் 700 கோடிக்கு விற்பனை என்று சொல்லுவது அவதூறாம்! உங்க சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு எல்லாம் பயப்பட நாங்க திராவிட தொடைநடுங்கிகள் அல்ல.

கேவலம்
மற்ற மாநிலங்களில் சாராய கடைகள் உண்டு, ஆனால்... ஆளும் கட்சி அமைச்சர்களும் எம்.பிக்களும் சாராய ஆலையை நடத்துவது, அரசே டாஸ்மாக் கடைகளை நடத்துவது, பார்களை ஆளும் கட்சிகாரர்களுக்கே டெண்டர் விடுவது என மொத்த ஆட்சியையும் கட்சியையும் சாராயத்தை நம்பி நடத்தும் கேவலம் திராவிட மாடல் தமிழகத்தில் தான்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பல விவகாரங்களில்
ஷியாம் கிருஷ்ணசாமி தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து ட்விட்டரில் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். கோவை கார் வெடிப்பு சம்பவம், நீட் விவகாரம், இந்து மதம் சர்ச்சை என பல விஷயங்கள் குறித்தும் தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார் ஷியாம் கிருஷ்ணசாமி. கடந்த சில ஆண்டுகளாகவே புதிய தமிழகம் கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார் ஷியாம். கிருஷ்ணசாமியைத் தொடர்ந்து அவரது வாரிசும் திமுகவை கடுமையாக விமர்சித்து வருவது அரசியல் அரங்கில் கவனிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications