தேவேந்திரர் மகன் என படம் எடுப்பீர்களா.. தேவர் மகன் பற்றி கிருஷ்ணசாமியும், திருமாவளவனும் கருத்து
தேவர் மகன் 2 படம் பற்றி புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமியும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: தேவர் மகன் 2 படம் பற்றி புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமியும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் தேவர் மகன் 2ம் பாகத்தை எடுக்க போவதாக அறிவித்து இருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு பலத்த விவாதத்தை உருவாக்கி உள்ளது. அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பின் நடிகர் கமல்ஹாசன் மிகவும் வேகமாக செயலாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இவர் தேவர் மகன் 2ம் பாகம் பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமியும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணசாமி அறிக்கை
இந்த படம் குறித்து கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கமலஹாசன் என்ற நடிகரை மிக மிக மதிக்கக் கூடியவன் நான். ஆனால் அவர் வைக்கும் திரைப்படப் பெயர்களால் இருவருக்குள்ளும் மிகப்பெரிய இடைவெளி உண்டாகிவிட்டது. அவரின் திரைப்படப் பெயர்கள் தமிழ்சாதிகளிடையே பிளவுகளையும், பிரிவினைகளையும் உருவாக்கியிருக்கிறது.
முதல்பாகம் எப்படி
1993ல் வெளியான தேவர் மகன் முதல் பாகத்தால் தென்தமிழகத்தின் இரண்டு மிகப்பெரிய சமூக மக்களிடையே பெரிய அளவிலான மோதல்களை ஏற்படுத்தியது. அதனால் சாதிப் போர் நடந்துகொண்டே இருக்கிறது. அந்தப் படத்தால் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நாங்கள் நஷ்ட ஈடு வேண்டும் என வழக்குப் போட்டிருந்தால் உங்களிடத்தில் இருக்கிற சொத்துக்களே போதாது.
தேவேந்திரர் மகன் என்று எடுங்கள்
நீங்கள் செய்த தவறை சரிசெய்யக் கூடிய வகையில், தேவேந்திரகுல வேளாளர்களுடைய பெருமையை வைத்து படமெடுத்திருக்க வேண்டும். இந்த படத்திற்கு"தேவேந்திரர் மகன்" என பெயர் வைத்தால் நீங்கள் உண்மையிலேயே சமநிலையை விரும்பக்கூடிய நடுநிலையாளராக அனைவராலும் கருதப்படுவீர்கள் ஒருவேளை தேவர் மகன் -2 என பெயரிட்டால் சண்டியருக்குக் (விருமாண்டி) கொடுத்த எதிர்ப்புகளைக் காட்டிலும் அதிக எதிர்ப்பு தெரிவிக்கக் சூழல்கள் உருவாகும் என கிருஷ்ணசாமி குறிப்பிட்டு இருக்கிறார்.
திருமாவளவன் கருத்து
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது கருத்தில், சாதிப் பிரச்சினைகளை விவாதிப்பது, அதைப்பற்றி உரையாடல் செய்வது அவசியம். ஆனால் சாதியை மையமாக வைத்து அரசியல் செய்வது, படம் எடுப்பது, அரசியல் ஆதாயத்திற்காக படம் எடுப்பது வரவேற்கத்தக்கதல்ல. இதை விவாதிக்க வேண்டுமே தவிர, அரசியலுக்காக படம் எடுக்க கூடாது என்றுள்ளார்.