தமிழக காங்கிரசுக்கு புது தலைவர் யார்.. நகம் கடிக்கும் கதர்கள்.. கே.எஸ்.அழகிரி பல்ஸ் என்ன தெரியுமா?
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகக் கூடும் என தகவல்கள் உலா வரும் நிலையில், அதைப்பற்றியே அலட்டிக்கொள்ள வில்லையாம் கே.எஸ்.அழகிரி.
பதவிக்காக யாரிடமும் மண்டியிட்டு நிற்க விரும்பாத அவர், வந்தால் வரட்டும் போனால் போகட்டும் என்ற மனநிலைக்கு சென்றுவிட்டாராம். இது குறித்து சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரிடம் நாம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது; '' தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு புதிய நபரை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமிக்கப் போவது உண்மை.''

''ஆனால் அது தொடர்பான அறிவிப்பு இன்று வருமா நாளை வருமா என்பது பற்றி எனக்குத் தெரியாது. மொத்தத்தில் தலைவர் மாற்றம் மட்டும் உறுதி. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் கே.எஸ்.அழகிரியை பொறுத்தவரை அவரது பதவியை தக்க வைக்க அவர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.''
''தனது தலைமையில் தமிழக காங்கிரஸ் சந்தித்த நாடாளுமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்றதை ஹிஸ்டாரிக்கல் ரெக்கார்டு ஆக கருதுகிறார். இது போதும் காலத்துக்கும் தன் பெயர் சொல்லும் எனக் கருதுகிறார். இதனால் தான் இன்னும் அவர் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.'' எனத் தெரிவித்தார்.
கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆவது கவனிக்கத்தக்கது. தற்போது அவர் பதவி வகிப்பதே போனஸ் காலத்தில் தான். இதனிடையே புதிதாக நியமிக்கப்படுபவரிடம் பதவியை கொடுத்துவிட்டு ரிலாக்ஸாக இருக்க விரும்புகிறார் கே.எஸ்.அழகிரி. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் கடலூர் மக்களவைத் தொகுதியில் களமிறங்கும் முடிவிலும் இருக்கிறாராம்.
ஆனால் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கும் அழகிரிக்கும் சிக்கல் வரலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications