நீட் தேர்வு பற்றி பேச அதிமுகவுக்கு என்ன தகுதி உள்ளது...? கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்..!
சென்னை: நீட் தேர்வு நடத்துவதற்கான அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்துவிட்டு இப்போது அதை பற்றி பேச அதிமுகவுக்கு என்ன தகுதியுள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
24.5.2016 அன்று பா.ஜ.க. அரசால் நீட் தேர்வு நடத்துவதற்கான அவசர சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் போது அதிமுகவின் 39 மக்களவை உறுப்பினர்களும், 13 மாநிலங்களவை உறுப்பினர்களும் என்ன செய்தார்கள் என வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
போர்க்கோலம்
நடப்பாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 8.41 லட்சம். இதில் 3.44 லட்சம் பேர், அதாவது 41 சதவிகிதம் பேர் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள். தமிழகத்தில் உள்ள 25 அரசு மருத்துவ கல்லூரிகளில் 3400 இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள 3400 இடங்களில் 405 இடத்தில் தான் அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள், தமிழக அரசு, தமிழ்ச் சமுதாயம் என அனைத்து பிரிவினரும் எத்தகைய போர்க்கோலம் பூண்டு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை நினைக்கும் போது மிகுந்த வேதனையே ஏற்படுகிறது.
நீட் தேர்வு
தமிழகத்தில், நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் உரிய பலனை பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம் ? இதுகுறித்து பாரபட்சமற்ற முறையில் அணுகினால், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருக்கிற கல்விமுறையைத்தான் குற்றம் சாட்ட வேண்டியிருக்கிறது. தமிழக கல்விமுறையின் காரணமாக வழங்கப்பட்டுள்ள பாட திட்டத்தில் பயில்கிற மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போனதற்கு யார் பொறுப்பு ? இதற்கான பொறுப்பை தமிழக ஆட்சியாளர்கள் ஏற்க வேண்டாமா ?
பயிற்சி முகாம்
கடந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 412 இலவச பயிற்சி முகாம்கள் திறந்து வைக்கப்பட்டன. இதில் 19,000 மாணவர்கள் இலவச பயிற்சி பெற்றனர். ஆனால், இவர்களில் ஒருவர் கூட நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போனதற்காக அ.தி.மு.க. அரசு வெட்கித் தலைகுணிய வேண்டாமா ? குறைந்தபட்சம் கல்வியமைச்சர் தமது பொறுப்பில் இருந்து விலகியிருக்க வேண்டாமா ?
மறைமுக ஆதரவு
தமிழகத்தில், நீட் தேர்வை அறிமுகம் செய்ததற்கு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் நடைபெற்ற மத்திய ஆட்சி தான் காரணம் என்று அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த குற்றச்சாட்டிற்கு என்ன ஆதாரம் ? நீட் தேர்வு நடத்துவதற்கான அவசர சட்டம் 24.5.2016 அன்று பா.ஜ.க. அரசால் பிறப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, 5.8.2016 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. அன்றைய தினம் மக்களவையில் அ.தி.மு.க.விற்கு 39 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களும் இருந்தனர். நீட் தேர்வை எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு மட்டுமே செய்தனர். எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை. அப்போது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார் என்பதை எவரும் மறந்திட இயலாது.
ஓரளவு நீதி
இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் அரசு 10 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கி, அரசாணை பிறப்பித்ததை அறிந்த தமிழக அரசும் 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்தது. அதற்குப் பிறகுதான் வேறு வழியில்லாமல் தமிழக ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார். இத்தகைய நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு, தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓரளவு நீதியும், நியாயமும் கிடைத்திருக்கிறது.