காங்கிரஸ் போராட்டங்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை! ஷிப்ட் முறையில் இன்சார்ஜ்கள்! பலே திட்டம்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்களை கண்காணிக்க சத்தியமூர்த்தி பவனில் கட்டுப்பாட்டு அறை அமைத்திருக்கிறார் கே.எஸ்.அழகிரி.
காலை முதல் மதியம், மதியம் முதல் மாலை என இரண்டு ஷிப்ட்களில் இதற்காக நிர்வாகிகளை பணியமர்த்தும் பலே திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் போராட்டம் நடத்தாமல் எந்த மாவட்ட நிர்வாகியும் டிமிக்கி கொடுக்க முடியாது என்பது கே.எஸ்.அழகிரியின் கணக்காக உள்ளது.

ராகுல்காந்தி
பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருப்பது நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

கண்காணிக்கு ஸ்பெஷல் டீம்
இந்த போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும், போராட்ட விவரங்களை சேகரிக்கவும் சத்தியமூர்த்தி பவனில் கட்டுப்பாட்டு அறை அமைத்திருக்கிறார் கே.எஸ். அழகிரி. மேலும், அதோடு மட்டுமல்ல காலை, மதியம் என இரண்டு ஷிப்ட்களிலும் இன்சார்ஜ்களை பணியமர்த்தும் பலே திட்டத்தையும் அழகிரி கையில் வைத்திருக்கிறார்.

முதல்முறையாக
தமிழகத்தில் இதுவரை எந்த அரசியல் கட்சியும் செய்யாத ஒரு நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. சொந்தக் கட்சியினர் போராட்டங்களை முறையாக நடத்துகிறார்களா என்பதை கண்காணிக்க ஸ்பெஷல் டீம் அமைப்பதெல்லாம் இதுவரை எங்கும் கேட்டிராத நிகழ்வாக உள்ளது. இதனிடையே சுமதி அன்பரசு, செந்தமிழ் அரசு, அகரம் கோபி, அஷன் ஷேக், விஜய் சேகர், ரஞ்சித்குமார் என 20 பேர் கொண்ட குழுவை இதற்காக களமிறக்கியுள்ளார்.

ஏமாற்ற முடியாது
போராட்டங்களை கண்காணிக்க சத்தியமூர்த்தி பவனில் கட்டுப்பாட்டு அறை அமைத்திருப்பதன் மூலம் யாரும் போராட்டம் நடத்தாமலே நடத்தியதாக டிமிக்கி கொடுக்க முடியாது என்பது கே.எஸ்.அழகிரியின் கணக்காக உள்ளது.












Click it and Unblock the Notifications