மேகதாது அணை கட்ட தமிழகம் ஒத்துழைக்க வேண்டும் - குமாரசாமி
சென்னை: மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மேகதாது அணை கட்ட தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை. அதை இந்த ஊடக சந்திப்பு மூலம் கோரிக்கையாக வைக்கிறேன்.
நாம் இந்தியா பாகிஸ்தான் கிடையாது. சகோதர சகோதரிகள். உபரி நீரை சேமித்து வைக்கவே அணை கட்ட விரும்புகிறோம். இதை வேறு எதற்கும் பயன்படுத்த மாட்டோம். விவசாயத்துக்கு இந்த தண்ணீரைப் பயன்படுத்த மாட்டோம்.
இது சாதாரண நீர்த்தேக்கம்தான். தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரை கேட்கும்போதெல்லாம் திறந்து விடுவோம். நல்ல மழை இருக்கும்போது நிறைய தண்ணீர் வருகிறது. அதை தமிழகத்திற்குத் திறந்து விடுகிறோம். ஆனால் தமிழகத்தில் போதிய அணைக்கட்டுகள் இல்லை. இதனால் தண்ணீர் வீணாக கடலில் போய்ச் சேருகிறது. அதைத் தடுத்து சேமிக்கவே இந்த அணை கட்ட திட்டமிட்டுள்ளோம்.
இதை தமிழகம் கெளரவப் பிரச்சினையாக பார்க்க வேண்டாம். சகோதர உணர்வுடன் கேட்கிறேன், ஒத்துழைப்பு தாருங்கள். கடந்த 30-40 வருடமாக இந்த கோரிக்கையை விடுத்து வருகிறோம். இன்று எழுந்த பிரச்சினை அல்ல இது, 125 வருடப் பிரச்சினை காவிரிப் பிரச்சினை என்றார் குமாரசாமி.