400 வருடங்களாக நடக்காத கும்பாபிஷேகம்!.. 860 நாட்களில் 1041 கோயில்கள்.. ஸ்டாலின் செம வைப்..
சென்னை: இந்த திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்து 860 நாட்களைக் கடந்துள்ளது. ஆனால், அதற்குள் 1041 கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. ஒருநாளைக்கு ஒன்று எனக் கணக்கிட்டால்கூட இது மலைப்பை உண்டாக்கும் இமாலய சாதனை.
அது மட்டுமல்ல, இந்த 2 ஆண்டுகளில் ரூ.4,505 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளன. இந்த இந்து சமய அறநிலையத் துறை உருவான காலம் தொட்டு, நடந்திராத சாதனை இது.

இந்தச் சாதனைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், "எல்லார்க்கும் எல்லாம்" என்ற #DravidianModel ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன.
5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு. ஏறக்குறைய 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது

இந்து சமய அறநிலையத்துறை. இறை நம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்" என்று சில நாட்கள் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
எப்படி முடிந்தது? 860 நாட்களில் 1041 கோயில்களில் குடமுழுக்கு? அப்போது ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி என பரப்பப்படுவது பொய்யான பிரச்சாரமா? சிலரிடம் பேசினோம்.

வியக்கவைக்கும் புள்ளிவிவரங்களுடன் அடித்து ஆடினார் அரசியல் விமர்சகர் ராமசுப்பிரமணியம்.
அவர், "திமுக ஆட்சிக்கு வந்த 07.05.2021 அன்று முதல் 11.09.23 வரை ஏறக்குறைய 1041 கோயில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன.

நான் இதுவரை காமராஜர் ஆட்சியைப் பார்த்திருக்கிறேன். அடுத்து அண்ணாதுரை ஆட்சியைப் பார்த்திருக்கிறேன். மு.கருணாநிதியின் ஆட்சிக் காலத்தையும் பார்த்திருக்கிறேன். இன்னும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஒபிஎஸ், ஈபிஎஸ் வரையான பல ஆட்சிகளைப் பார்த்திருக்கிறேன்.
ஆனால், இதுவரை எந்த ஆட்சியிலும் பார்க்காத மிகச் சிறப்பான ஆன்மிக ஆட்சி இதுதான். அதைச் சிறப்பாக ஸ்டாலின் செய்துவருகிறார். இது வார்த்தைக்காகச் சொல்லவில்லை. உண்மையாக மனப்பூர்வமாகச் சொல்கிறேன்.

ஏனென்றால், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஊரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் 400 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
அதைப்போலவே 300 ஆண்டுகளுக்குப் பிறகு உத்திரமேரூரில் உள்ள அரிய மாணிக்க வரதராஜ பெருமாள் கோயிலில் குடமுழுக்கு நடந்துள்ளது. 150 ஆண்டுகளுக்குப் பின்னால், அரக்கோணத்தில் அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயிலில் குடமுழுக்கு நடந்துள்ளது.

மேலும் 123 வருடங்களுக்குப் பிறகு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரிகேசநல்லூரில் இருக்கும் பெரியநாயகி சமேத அரியநாத சாமி திருக்கோயிலில் குடமுழுக்கு நடந்துள்ளது. 110 வருடங்களுக்குப் பிறகு வேலூர் மாவட்டத்தில் உள்ள திரெளபதி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு நடித்துள்ளது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு 5 கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளன.
இதைப்போல அன்னதான திட்டத்தைத் திராவிட மாடல் அரசுதான் நாள் முழுவதும் அன்னதான திட்டம் என மாற்றி அமைத்திருக்கிறது.

இந்த ஆட்சியைத்தான் ஹிந்து விரோத ஆட்சி என்று பொய்யைப் பரப்பி வருகிறார்கள். அதைத் தனது செயல்களால் உடைத்து எரிந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்" என்கிறார்
மயிலம் பொம்மபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் ஏறக்குறைய 36 ஆயிரம் திருக்கோயில்கள் இருக்கின்றன.

நமது நாடு மதச்சார்பற்ற நாடு. எல்லா மதங்களையும் சரிசமமாகப் பார்க்க வேண்டும். நம் மாநிலமும் மதச்சார்பற்ற மாநிலம்தான். அதுவும் அனைத்தையும் சமமாகப் பார்க்க வேண்டும். எல்லா துறைகளையும் சம அளவில் நடத்த வேண்டும்.
அதனடிப்படையில் தான் இன்றைக்கு அறநிலையத்துறையானது ஆயிரம் கோயில்களுக்குக் குடமுழுக்கை நடத்தி இருக்கிறது. இந்த ஆயிரம் என்பது சிறப்புக்குரியது. ஒரு மனிதனின் வாழ்நாள் சுமார் 120 ஆண்டுகள் என்கிறார்கள்.

ஆகவே ஒருவன் இந்த 120 ஆண்டுகளை எட்டிவிட்டால், அவருக்கு நாம் சிறப்புச் செய்கிறோம். அதில் பாதி 60 ஆண்டுகள். அதைத்தான் மணிவிழா என்று கொண்டாடுகிறோம்.
அதற்கு அடுத்தது 80வது விழா. இந்த 80 வயதை ஒருவர் தொடும் போது அவர் தனது வாழ்நாளில் 1000 பிறைகளை வழிப்பட்டுள்ளதாக ஒரு ஐதீகம். அப்படி ஆயிரம் பிறை கண்டவரை நாம் சந்தித்து அவரிடம் ஆசி பெறுகிறோம். அதன் மூலம் நமக்கு ஒரு அருள் கிடைக்கிறது. இது ஒரு நம்பிக்கை. ஆகவே இந்த ஆயிரம் என்பது சிறப்புக்குரியது.

அதன் அளவில் இந்த ஆட்சியானது 1000 கோயில்களுக்குக் குடமுழுக்கைச் செய்திருக்கிறது. இது சிறப்பான பணி. அதைச் சரியான அமைச்சரான சேகர்பாபுவிடம் ஒப்படைத்துள்ளார். அவரே மிகப் பெரிய பக்தர். அவர் கடந்த 45 ஆண்டுகளாகச் சபரிமலை சென்று வருகிறேன் என்று என்னிடம் சொன்னார். ஏறக்குறை 800 முறை சென்றுள்ளதாகச் சொன்னார்.
இந்த ஆட்சியில் எங்களைப் போன்ற அனைத்து ஆதீனங்களையும் எந்தெந்த அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைக்க முடியுமோ அதற்கு எல்லாம் அழைத்து மரியாதை செய்கிறார்கள். நானே 6 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். இந்த அரசு ஒரு ஆன்மிக அரசுதான். அதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை" என்கிறார்.

தமிழ் சைவப் பேரவை கலையரசி நடராசன், "முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று சொன்னார். அவர் வித்திட்ட ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இடையிடையே சில சறுக்கல்கள் ஏற்பட்டாலும் கூட அண்ணா சொன்ன கருத்தியல் ஆணித்தரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அண்ணாதுரையைப் போலவே முன்னாள் முதல்வர் மு கருணாநிதி, "நான் கோயில் போகிறேனா? இல்லையா? என்பதைப் பற்றி எல்லாம் விவாதிக்க வேண்டாம். நான் யார் கோயிலுக்குச் செல்வதையும் நான் தடுப்பதில்லை. அது அவரவர் விருப்பம். அவரவர் உரிமை.

அவரது குடும்பத்தாருக்கும் முழு சுதந்திரத்தைக் கொடுத்திருந்தார். அவரது பிள்ளை ஸ்டாலின். இவருக்கு ஆட்சி நெறிகளை எல்லாம் யாரும் கற்பிக்க வேண்டியதில்லை. தமிழக அரசின் அறநிலையத்துறையில் தான் ஆன்மிகமும் இருக்கிறது. அரசியலும் இருக்கிறது.
இந்த அரசை இறை நம்பிக்கையே இல்லாத ஒரு அரசு என்று சொல்லி கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அரசியல் விளையாட்டு செய்கிறார்கள். ஆனால், அந்த அரசுதான் 1000 கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்து உள்ளது. இந்தக் காலகட்டம் தமிழர்களுக்கு அரிய காலகட்டமாக இருக்கிறது.
இந்த நேரத்தில் முதல்வருக்கு நான் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். குடமுழுக்கு என்பது முழுக்க முழுக்க சமஸ்கிருத மொழியிலேயே நடத்தப்படுகிறது. அதைக் கொஞ்சம் மாற்றி தமிழில் நடத்த முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் இந்த ஆட்சியால் தான் அதைச் செய்ய முடியும். இவர் மாற்றினால், பின்னால் அந்த வழக்கம் தொடர ஆரம்பித்துவிடும்" என்கிறார்.
கோயில் இல்லாத ஊரில் குடி இருக்காதே என்பார்கள். இந்த ஆட்சியாளர்களோ குடமுழுக்கு செய்யாது ஒரு கோயிலையும் விட்டுவைக்காதே என்று சொல்வார்கள்போல.












Click it and Unblock the Notifications