கிரைய பத்திரம்.. ரூ.1.50 கோடிக்கு நில ஆவணம்? ஆள் மாறாட்டம், சாட்சி கையெழுத்து.. சென்னையில் பரபரப்பு
சென்னை: போலி ஆவணங்களை தயாரித்து ரூ.1.50 கோடி நில மோசடியில் தலைமறைவாக இருந்தவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.. ஆள்மாறாட்டம் செய்து, சாட்சி கையெழுத்து போட்டதற்காக 52 வயது நபர் சென்னையில் கைதாகி உள்ளார்.
தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் பெருகி வரும் நிலையில், தவறு செய்பவர்கள் ஒவ்வொருவராக கைதாகி வருகிறார்கள்.. குறிப்பாக அதிகமாக வருவாய் வரக்கூடிய துறையாக பதிவுத்துறை உள்ளது.. பணம் நிறைய புழங்கக்கூடிய துறையாக உள்ளதால், லஞ்சம் வாங்குவோர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

போலி பட்டாவை தயாரிப்பது, பட்டா பெயர் மாற்றம் செய்வது, வாரிசு சான்றிதழ் பெறுவது, நிலத்தை அளப்பது, சாதி சான்றிதழ், சொத்து பாகப்பிரிவினை, பத்திரப்பதிவு செய்வது, உள்ளிட்ட எத்தனையோ விஷயங்களுக்காக, சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள்.. இதில் பெண் அதிகாரிகளும் லஞ்சம் வாங்குவது கவலையை தந்து கொண்டிருக்கிறது.
லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கும் அதிகாரிகள் உடனுக்குடன் கைது செய்யப்படுகிறார்கள். எனினும், லஞ்ச புகார்கள் பதிவுத்துறையில் குறையாமலேயே உள்ளது.
போலி ஆவணம்: இப்போதுகூட, சென்னையில் ஒருவர், போலி ஆவணம் தயாரித்து ரூ.1.50 கோடி நில மோசடி செய்திருக்கிறார்.. மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நிர்மலா வல்லத் (72) என்பவர் நிலமோசடி தொடர்பாக கடந்த ஜூன் மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை தந்திருந்தார்..
அந்த புகாரில், "எனது கணவர் முரளி, கொரட்டூர் கிராமம், டிவிஎஸ் நகரில் 2,112 சதுரடி இடத்தை 1990ம் ஆண்டு கிரையம் பெற்றார்... என் கணவர் 2018ல் இறந்த பிறகு மேற்படி சொத்து மனுதாரரின் அனுபவத்தில் உள்ளது. இந்நிலையில், மேற்கூறிய நிலத்தில் மின் இணைப்பு பலகை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரித்தபோது, கீர்த்திகா என்பவர் சதீஷ் என்பவரிடமிருந்து கடந்த 2023ம் வருடம் கிரையம் பெற்றுள்ளதாக தெரிய வந்தது.
கிரையப்பத்திரம்: சதீஷ் என்பவரை விசாரித்தபோது, தான் முரளி என்பவரிடம் இருந்து கிரையம் பெற்றதாக தெரிவித்தார். என் கணவர் 2018ல் இறந்துவிட்ட நிலையில், 2023ல் சதீஷ் என்பவருக்கு எப்படி கிரையம் செய்திருக்க முடியும்? ஆகவே போலி ஆவணங்கள் தயார் செய்து எனது கணவர் முரளி பெயரில் ஆள்மாறாட்டம் செய்து எனது சொத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், இதுகுறித்த விசாரணையையும் மேற்கொண்டனர். அப்போதுதான், இந்த வழக்கில் முரளி என்பவர் ஹரிகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து, உண்மையான முரளி போன்று ஆள்மாறாட்டம் செய்து தங்களுக்கு சொந்தமில்லாத சொத்தை வேறு நபர்களுக்கு விற்றுள்ளது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1.50 கோடி ஆகும்.
அதிரடி கைது: இதனையடுத்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், ராதிகா மற்றும் கணபதி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் போலி கிரைய பத்திரத்தில் போலி சாட்சி கையெழுத்தும் போட்ட மாதவரம் சாமி நகர் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (எ) முகமது ரபிக் (52) என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications