சிக்கும் மாஜி அமைச்சர்?.. பண்ணை வீட்டுக்குள் நுழைவது யார்..? பகீர் சிசிடிவி ஆதாரம்
முன்னாள் அமைச்சர் தங்கமணி மருமகன் மீது மோசடி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ், 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்ததாக ஒருவர் புகார் அளித்துள்ள நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் புகார் அளித்தவரின் பண்ணை வீட்டிற்குள் நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததுமே, அதிமுக மாஜிக்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால், 2 மாத காலமாகவே அதில் முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு வந்தது.
தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில், தன்னுடைய கவனத்தை வேறு பக்கம் திருப்பி வருகிறது.. அதற்கேற்றபடி உள்ளாட்சி தேர்தலும் விரைவில் வர உள்ளது.

பலவீனம்
இப்படிப்பட்ட சூழலில், ஒருபக்கம் அதிமுகவை பலவீனப்படுத்தி கொண்டே, கொங்குவில் கால் பதிக்கும் வேலையை திமுக முன்னெடுத்து வருகிறது.. அதன் ஒருபகுதியாக, ஏராளமான மாஜிக்கள், முன்னாள்கள், மாற்று கட்சியை சேர்ந்த பிரபலங்கள் திமுக பக்கம் வந்து கொண்டுள்ளனர்.. மற்றொரு பக்கம் 2 முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடந்தது.. அடுத்தது யாரோ? என்று எதிர்பார்ப்பும் நிலவியது.

பேட்டி
இப்படிப்பட் சூழலில்,2 தினங்களுக்கு முன்பு இது தொடர்பாக சஞ்சய்குமார் ரெட்டி என்பவரின் வழக்கறிஞர் விஜயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் சொல்லும்போது, "திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சஞ்சய்குமார் ரெட்டி. வெளிநாடு வாழ் இந்தியரான இவருக்கு திருப்பூர் தெற்கு வட்டம் கண்டியன் கோவில் கிராமத்தில் 2.26 ஏக்கர் நிலம் உள்ளது... இதில், அவர் பண்ணை வீடு கட்டி வந்துள்ளார்... அப்போது கட்டுமான பணிகளுக்காக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷுடம் ரூ.50 லட்சம் கடன் கேட்டுள்ளார்.

பணம்
அப்போது தினேஷ் அவரின் உறவினர்கள் கேஆர் தங்கராஜ் மற்றும் எஸ். ஹரிபாஸ்கர் பெயரில் நிலத்தை கிரயம் செய்து கொடுத்தால் கடன் கொடுப்பதாக சொல்லி உள்ளார்.. இதற்கு சஞ்சய்குமார் ரெட்டி ஒப்புக்கொண்டார்.. இதனையடுத்து, சொத்தின் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் அவருக்கு ரூ.20 லட்சத்து 39 ஆயிரம் மட்டும் கொடுத்துவிட்டு நிலத்தை திருப்பூர் தொட்டிபாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரயம் செய்துவிட்டார்கள்.

உறுதி
பிறகு, கடனை செலுத்தியவுடன் நிலத்தை சஞ்சய்குமார் ரெட்டி பெயரில் திருப்பி கிரயம் செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.. ஆனால், அதற்குள் காங்கயம் பகுதியில் உள்ள ஒருவர் அந்த நிலத்தை மூன்றாம் நபருக்கு பேசி விற்பனை செய்ய முயன்றுள்ளார்.. இதனிடையே கடனை திருப்பி செலுத்தி விடுகிறேன் நிலத்தை மீண்டும் என் பெயரில் கிரயம் செய்து கொடுக்க வேண்டும் என சஞ்சய்குமார் ரெட்டி தினேஷிடம் கேட்டு உள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார்.

புகார் மனு
இந்நிலையில் கிரயப்பத்திரத்தை ரத்து செய்யக் கோரி திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது... எனவே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வதை தடுக்க கோரியும், நிலத்தை மீட்டு தரக்கோரியும் பதிவுத்துறை துணை தலைவா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஆதாரம்
அப்போதே இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க போகிறது என்று எதிர்பார்க்கப்பட்டது.. இந்தநிலையில் திடீர் திருப்பமாக முக்கிய ஆதாரம் சிக்கி உள்ளது.. சஞ்சய்குமாரின் பண்ணை வீட்டு முன்புற கேட்டை உடைத்து தினேஷின் ஆதரவாளர்கள் உள்ளே நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், வெறும் பழிவாங்கும் நடவடிக்கை என்று பொத்தாம் பொதுவான அதிமுகவின் பேச்சுக்கு இடமளிக்காமல், எதையும் தீர விசாரித்து, வலுவான ஆதாரங்களின் அடிப்படையிலேயே திமுக அணுகி வருகிறது.. மேலும் சட்டப்படியும் அதிமுக மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications