நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனை... மனமுடைந்து போன அமைச்சர் சி.வி.சண்முகம்
Recommended Video
சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தனது சகோதரி மகன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் இருந்து மீளமுடியாமல் மனமுடைந்து போய்விட்டாராம்.
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்பவர் சி.வி.சண்முகம். அரசியல் அதிரடிகளுக்கு பெயர்போனவர், யாருக்கும் அஞ்சாதவர், மனதில்பட்டதை அக்கம்பக்கம் பார்க்காமல் உரக்க கூறுபவர் என அவரை பற்றி பெருமிதம் தெரிவிக்கிறார் அவருக்கு நெருக்கமான நிர்வாகி ஒருவர். இந்நிலையில் கடந்த வாரம் சகோதரி மகன் தற்கொலை செய்துகொண்டது சி.வி.சண்முகத்தை உலுக்கிவிட்டதாம்.
சொந்த மகனை போல் சகோதரி மகன் லோகேஷை வளர்த்து வந்தார் அமைச்சர் சி.வி.சண்முகம். படிப்பதற்கு ஆஸ்திரேலியா எல்லாம் அனுப்பி வைத்தார், மறைந்த தனது சகோதரி இல்லாத குறையை தாமே தாயாக நின்று கவனித்தார் சண்முகம். இப்படி பார்த்து பார்த்து வளர்க்கப்பட்ட அந்த லோகேஷ் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டது அமைச்சர் சண்முகத்தை மட்டுமல்லால் அவரது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் நிலை குலைய செய்துள்ளது.
அண்மையில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் மகன் விபத்தில் சிக்கி மிக கடுமையாக பாதிக்கப்பட்டார். காலில் பலத்த அடிபட்டதில் எலும்புகள் நொறுங்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே சகோதரி மகனும் தவறான முடிவை எடுத்து குடும்பத்தாருக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
இப்படி பட்ட காலிலே படும் என்ற பழமொழிக்கு ஏற்ப, தொடரும் துயர நிகழ்வுகளால் கடந்த 4 நாட்களாகவே அமைச்சர் சி.வி.சண்முகம் யாரிடமும் பேசாமல் மிகுந்த இறுக்கத்துடன் இருப்பதாகவும், மனமுடைந்து அழுததாகவும் அவருக்கு நெருக்கமான வட்டத்தில் உள்ள நிர்வாகி ஒருவர் கூறுகிறார்.