கடந்த வாரம் கம்பீரமாக பேசினாரே சங்கரய்யா.. இறுதி மூச்சாக இன்குலாப் ஜிந்தாபாத்! கடைசி வரை கம்யூனிசம்
சென்னை: இன்று வயது மூப்பு காரணமாக காலமான சுந்திர போராட்ட தியாகியும், முத்த கம்யூனிச தலைவருமான சங்கரய்யா, கடந்த வாரம் பேசிய வீடியோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு சிறை சென்ற வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான 100 வயதை கடந்த சங்கரய்யாவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தகைசால் தமிழர் விருதை வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்தது. முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும் மக்கள் தலைவருமான சங்கரய்யா நாட்டுக்காக பட்டப்படிப்பை துறந்தவர். அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது.

இதனை ஏற்று மதுரை காமராசர் பல்கலைக்கழக செனட் மற்றும் சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றி கவுரவ டாக்டர் பட்டத்தை சங்கரய்யாவுக்கு வழங்க முடிவு செய்தது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த முடிவினை ஏற்க மறுத்து அந்த கோப்பில் கையெழுத்திடவில்லை. இதற்கு ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், ஆதரவு இயக்கங்களை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி சங்கரய்யாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் காலமானார்.
இந்த நிலையில் சங்கரய்யா கடந்த நவம்பர் 7 ஆம் தேதி கம்பீரமாக பேசி அனுப்பிய வீடியோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பேச்சாளர் சிந்தன் பகிர்ந்து இருக்கிறார். அதில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ராமமூர்த்தி நினைவகம், தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் நினைவரங்கம் விரிவாக்க இயக்கம், நவம்பர் தினத்தன்று ராமமூர்த்தி சிலை திறப்பு விழா அனைத்தும் மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகளாகும். தமிழ்நாட்டு மக்கள் இந்த நிகழ்ச்சிகளையும் மிகவும் மதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
இந்த விரிவாக்கமானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினுடைய பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு பல வசதிகளை செய்து கொடுக்கும். ஆகவே, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில குழுவினுடைய பணிகள் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக ஓங்கி நடைபெறுவதற்கு இந்த நிகழ்ச்சிகள் இன்றைக்கு விடை செய்யும். தோழர் ராமமூர்த்தி உடைய சிலை திறப்பு என்பது மிகவும் முக்கியமானது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) இன் முக்கியமான தலைவர்களான தோழர் பி.ராமமூர்த்தி, தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரது பெயரில் இந்த விரிவாக்கப் பணிகளை செய்து முடித்த அனைவருக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சி.பி.ஐ.(எம்) உருவாக்கிய 32 தலைவர்களில் ஒருவர், அன்புத்தோழர் என்.சங்கரய்யா (102), நவம்பர் 7, 2023 அன்று அலுவலக திறப்பு விழாவிற்காக பதிவு செய்து அனுப்பிய காணொளி. pic.twitter.com/IqDVcpYIZN
— சிந்தன் - Sindhan (@sindhan) November 15, 2023
இன்று நவம்பர் புரட்சி தினம். உலகையே உலுக்கிய இந்த நவம்பர் புரட்சி தினத்தில் உலகெங்கும் இந்த புரட்சியுடைய செய்திகள் பரவிக் கொண்டு இருக்கின்றன. அதுபோல், நம்முடைய நாட்டில் சோசலிசம் ஏற்படுவதற்கு முதல் படியாக மக்களின் ஜனநாயக புரட்சி ஏற்படுவதற்கு காரணமாக இந்த 2 பேரை மரியாதை செய்யும் எல்லா தோழர்களுக்கும் இன்குலாப் ஜிந்தாபாத்" என்று கூறினார். வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும், பொதுவுடைமை இயக்கத்திற்காகவும் போராடிய சங்கரய்யா தனது இறுதி மூச்சிலும் இன்குலாப் ஜிந்தாபாத் என முழங்கி சென்றிருக்கிறார்.












Click it and Unblock the Notifications