சசிகலா முதல்வராவார்...தமிழகம் இந்த துயரை சந்தித்துத்தான் தீரவேண்டும் - சித்தரின் கணிப்பு பலிக்குமா
ஜெயலலிதா ஒருநாள் முதல்வரானதுபோல், அவருடைய நிழலாகவே இருக்கிற சசிகலாவும் ஒருநாள் முதல்வராவார். தமிழகம் இந்த துயரையும் சந்தித்துத்தான் தீரவேண்டும் என்று மறைந்த வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் பிரபல வார இதழ் ஒன்றில் 90 களில்
சென்னை: நான்கு ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து சசிகலா சென்னை திரும்பியுள்ள இந்த நேரத்தில் இளவரசி, சுதாகரன், சசிகலாவிற்கு சொந்தமாக இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அரசுடமையாக்கப்பட்டு வருகின்றன. இத்தனை ஏக்கர் நிலங்களை சசிகலா குடும்பத்தினர் எப்படி வாங்கி குவித்தனர் என்று வாய் பிளக்கின்றனர் மக்கள். இப்போது நடக்கும் சூழ்நிலைகளை வைத்து 30 ஆண்டுகளுக்கு முன்பே வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் எழுதியிருக்கிறார்.
பெங்களூருவில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்து விட்டு சென்னை திரும்பிய சசிகலாதான் இன்றைக்கு ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறார். பெங்களூருவில் இருந்து சென்னை வரைக்கும் சில மணி நேரங்களில் கடந்து விடக்கூடிய தூரத்தை 23 மணிநேரம் பயணம் செய்திருக்கிறார். அமமுக தொண்டர்களின் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்த தெம்பில்தான் அன்புக்கு நான் அடிமை என்றும் அடக்கு முறைக்கு நான் அடிபணிய மாட்டேன் என்றும் சொல்லியிருக்கிறார். தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக சசிகலா கூறியுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் டிடிவி தினகரன்.
எம்.ஜி.ஆரின் செல்லப் பிள்ளைகளில் ஒருவராக விளங்கியவர் வலம்புரி ஜான். வார்த்தைச் சித்தர் என்று அழைக்கப்பட்டவர். 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல் முறையாக முதல்வராகப் பதவியேற்ற சமயத்தில் நக்கீரன் வார இதழில் வணக்கம் என்ற பெயரில் தொடர் ஒன்றை எழுதினார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு வலம்புரி ஜானின் கட்டுரைகள் வைரல் ஆக பரவி வருகிறது. சசிகலா சிறையில் இருந்து விடுதலையான இந்த நேரத்தில் மீண்டும் அந்த கட்டுரைகள் வாசிக்கப்படுகின்றன. அதிலிருந்து சில
அடிமைப்பெண்
சீவகசிந்தாமணி காப்பியத்தில் வரும் சச்சந்தனைப் போல், தான் வீழ்வது தெரியாமலே வீழ்ந்து வருகிறார். படோபகரமான முதல்வராக இருந்தாலும், சசிகலா, நடராஜன் என்கிற கடற்கொள்ளையர்களின் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண்ணாகத்தான் இருக்கிறார்.
சசிகலா நடராஜன்
ஜெயலலிதாவின் விசுவாசமிக்க ஊழியர்களை, ஒவ்வொருவராக பழிவாங்கி, உடன் பிறந்த சகோதரன் ஜெயக்குமாரை கூட, ஜெயலலிதா உடன் சேர விடாமல் செய்து, உண்மைகளை அறிய விடாமல் செய்தனர். நடராஜனும், சசிகலாவும் தமிழகத்தை கொள்ளை அடிப்பதற்கு இடைஞ்சலாக இருந்தவர்களை, ஜெயலலிதாவின் பார்வையில் படாமல் துரத்தினர்.
கொள்ளையடித்தனர்
ஜெயலலிதாவை துாக்கி வளர்த்த மாதவன் நாயர், அவரின் அன்பை பெற்றார் என்பதற்காக, 35 ஆண்டுகள் பணியாற்றிய அவரை, 36 ஆயிரம் ரூபாய் வங்கியில் வைத்துள்ளார் என்று காரணம் காட்டி, ஓரம் கட்டியது சசிகலாவும், நடராஜனும் தான். இதெல்லாம் ஒரு காலத்தில் கோடி, கோடியாக கொள்ளை அடிக்கலாம் என்பதற்காகவும், தன் சொந்த, பந்தங்களை மாத்திரமே வாழ வைக்கலாம் என்பதற்கான சசிகலா, நடராஜனின் கூட்டுத் திட்டமே காரணம்.
தமிழகம் உணரும்
தங்களது சொந்தங்களுக்காக, தமிழகத்தில் ஆட்சி இயந்திரத்தை சசிகலாவும், நடராஜனும் உருக்குலைத்து விட்டனர். இந்த சசிகலா, எம்.ஜி.ஆர்., ஆளுமல்ல, ஜெயலலிதாவின் ஆளுமல்ல; சசிகலா சசிகலாவின் ஆள். இதை தமிழ்நாடு முழுவதுமாக உணரும்; அப்போது கூட ஜெயலலிதா உணரமாட்டார் என்று அதில் சசிகலா நடராஜன் குறித்துக் கூறியிருந்தார் வலம்புரி ஜான்.
அதிர்ச்சியான விசயம்
ஒரு நடிகையாக இருந்து தனது சக குருவின் அரசியல் வாழ்வில் இணைந்து ஜெயலலிதா இன்று தமிழகத்தின் முதல்வராக ஆனதையே நம்மால் ஜீரணித்துக்கொள்ள முடியாமல் இருக்கிறோம். ஆனால் ஜெயலலிதா முதல்வரானது கூட அதிக ஆச்சர்யம் அடையவேண்டிய விஷயமில்லை. திறமையான நிர்வாகி, படிப்பாளி, ஒரு கட்சியில் பெருந்தலைகளுடன் போராடி இந்த இடத்திற்கு வந்தார். ஆனால் இதையெல்லாம் விட ஒரு ஆச்சர்யமும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் ஒன்று. இன்று இல்லையென்றாலும் என்றேனும் ஒருநாள் நடந்தே தீரும்.
பால பாடம் கற்ற சசிகலா
நான் இதைச் சொல்வதால் என்னை பைத்தியக்காரன் என்று கூட சொல்லலாம். ஆனால் தனது பலஹீனங்களை எல்லாம் பலமாக்கிக்கொண்டு ஜெயலலிதா ஒருநாள் முதல்வரானதுபோல், அவருடைய நிழலாகவே இருக்கிற சசிகலாவும் ஒருநாள் முதல்வராவார். அதற்கான பால பாடங்களை ஜெயலலிதாவிடமிருந்தே அவர் கற்றுக்கொண்டிருக்கிறார்.
பலித்த வாக்கு
சசிகலா முதல்வராவதற்கு இன்று ஜெயலலிதாவால் விரட்டி விரட்டி அடிக்கப்படும் நடராஜனே முக்கிய பங்கு வகிப்பார். தமிழகம் இந்த துயரையும் சந்தித்துத்தான் தீரவேண்டும். அப்படி ஒருநாள் வரும்போது என்னை நினைத்துப் பார்ப்பார்கள் தமிழர்கள் என்று எழுதியிருக்கிறார் வார்த்தை சித்தர். சித்தர்கள் வாக்கு பலிக்கும் என்று சும்மாவா சொன்னார்கள். சசிகலாவிற்கு முதல்வர் ஆகும் யோகம் இருக்கிறதா என்று பார்க்கலாம்.