கைகோர்க்கும் அதிமுக-திமுக! இடதுசாரிகளின் நிலை என்ன? யோசிக்கும் திருமாவளவன்!
சென்னை: 118 எம்எல்ஏக்களின் ஆதரவோடு யார் வந்தாலும் ஆட்சியமைக்க அழைப்பேன் என்று ஆளுநர் கூறியிருக்கிறார். இந்நிலையில் திமுக-அதிமுக இணைவது பற்றி பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அப்படி ஒன்று நடந்தால் இடதுசாரிகளின் நிலை என்ன? விசிக எந்த பக்கம் போகும் என்று கேள்வி எழுந்திருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இருப்பினும் தனிப் பெரும்பான்மை இல்லாததால் விஜய்யால் முதலமைச்சராக முடியவில்லை.

இணையும் கழகங்கள்
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு மீண்டும் அதிமுக-திமுக இணைய வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. கடந்த 2 நாட்களாக பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்தை வலுப்படுத்தும் விதமாகத்தான் ஆளுநர் அர்லேக்கரின் பேச்சுகளுக்கும் இருக்கின்றன. நேற்று ரிபப்ளிக் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த அவர், திமுக-அதிமுக இணைந்து பெரும்பான்மையுடன் வந்தால், ஆட்சி அமைக்க அனுமதிப்பீர்களா? என்று நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு, "118 நம்பருடன் யார் வந்தாலும் ஆட்சி அமைக்க அழைப்பேன்" என்று கூறியிருக்கிறார்.
மேஜிக் நம்பர் 118
அதிமுக-திமுக இணைந்து ஆட்சி அமைக்க வருகிறது எனில், தமிழ்நாட்டில் அது ஒரு பெரிய அரசியல் திருப்பமாக இருக்கும். குறிப்பாக இடதுசாரிகள் மற்றும் விசிகவின் நிலை என்ன என்கிற கேள்வியாக இருக்கும்.
திராவிட கட்சிகள் மீது இருந்த அதிருப்திதான் விஜய் வர காரணம். மீண்டும் இந்த கட்கிகளே ஆட்சி அமைக்கிறது எனில், அடுத்த தேர்தலில் இரண்டு கட்சிகளும் காணாமல் போக வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இடதுசாரிகளின் நிலை
அதேநேரம், திமுக-அதிமுக இணைகிறது என்றால் கூட்டணி கட்சிகளோடு ஆட்சியமைக்க முடியும். காங்கிரஸ் இந்த கூட்டணியில் இருக்காது. இருப்பினும் தேவையான பெரும்பான்மை இந்த கூட்டணிக்கு இருக்கும். சிக்கல் என்னவெனில் இடதுசாரிகள் இந்த கூட்டணியை ஏற்பார்களா? என்பதுதான்.
மக்கள் தீர்ப்புதான் இடதுசாரிகள் அரசியல் தீர்மானிக்கும். மக்கள் புறக்கணித்த திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்து, பாஜகவை ஆதரிக்காத விஜய்யை எதிர்க்கும் அரசியலை செய்தால், எதிர்காலத்தில் இடதுசாரிகளும் மக்களால் புறக்கணிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
விஜய்யின் அரசியல்
உண்மைதான் விஜய் வழிநடத்தும் தவெகவிடம் பெரிய அரசியல் சித்தாந்தம் இல்லை. ஆனால், ஒரு விஷயத்தை மறுக்க முடியாது. பாஜக எதிர்ப்புதான் அது. பாஜக எதிர்ப்பை மையப்படுத்திதான் திமுக உடன் இடதுசாரிகள் இருக்கிறார்கள். இப்போது விஜய்க்கு வாய்ப்பளிக்காமல் போனால், பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக அதிகாரத்திற்கு வரும். அந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தால், நேரடியாக பாஜகவுக்கு உடன்பட்டது போல் ஆகிவிடும்.
குடியரசுத் தலைவர் ஆட்சி
யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் இருந்தால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமையலாம். 6 மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி இருந்தால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய 6 ஆண்டுகள் கூட ஆகலாம். எனவே அப்படி ஒரு நிலையை இடதுசாரிகள் ஏற்படுத்திவிடக் கூடாது என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.
அவசரம் காட்டாத இடதுசாரிகள்
அதேநேரம் எடுத்த எடுப்பில் விஜய்க்கு ஆதரவு கொடுத்துவிட முடியாது. காரணம், இதற்கு முன்னர் திமுக கூட்டணியில் இருந்தபோது திமுக செய்த தவறுகளை இடதுசாரிகள் தங்கள் முதுகில் சுமந்தார்கள். அதுபோன்ற ஒரு நிலையை விஜய் உருவாக்க மாட்டார் என என்ன நிச்சயம்?
எனவே குறைந்தபட்ச செயல் திட்டத்தை விஜய் கொடுக்க வேண்டும் என்று இடதுசாரிகள் எதிர் பார்க்கிறார்கள். அதன் அடிப்படையில் இடதுசாரிகள் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கலாம். இடதுசாரிகளை பொறுத்தவரை அமைச்சரவையில் இடம் என்பதை எதிர்பார்க்கிறவர்கள் அவர்கள் கிடையாது. எனவே இந்த விஷயத்தில் மாநில குழு மற்றும் மாநில செயற்குழுவின் முடிவை வைத்தே ஆதரவு எதிர்ப்பு என்பதை தீர்மானிப்பார்கள்.
திருமாவளவன் ஸ்டான்ட்
இடதுசாரிகளின் நிலைதான் திருமாவளவனின் நிலையாக இருக்கும். ஆனால், தவெக பக்கம் போனால் அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கு வணக்கம் வைக்க வேண்டிய சூழல் வரலாம். அதேபோல ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற கோரிக்கையும் திருமாவளவனிடம் இருக்கிறது. எனவே அமைச்சர் பதவியை எதிர்பார்ப்பார். எனவே திருமாவளவனின் நிலைப்பாடு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications