''பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுவோம்'' தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த் அறிவுரை கடிதம்!!
சென்னை: பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து வருங்காலத்தில் தோல்வியை சரி செய்து இமாலய வெற்றி பெறுவோம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டது. இதில் படுதோல்வியை சந்தித்தது. கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட பிரேமலதா டெபாசிட்டை இழந்தார்.
கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிகவுக்கு பெரும் அடி விழுந்தது. இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தேமுதிக தனித்தே போட்டியிடுகிறது. இந்த நிலையில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல்
அந்த அறிக்கையில் அவர் கூறுகையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தேமுதிகவினர் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தலும் தான் நமக்கான இலக்கு.

பீனிக்ஸ் பறவை போல்
பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து வருங்காலத்தில் தோல்வியைச் சரி செய்து இமாலய வெற்றி பெறுவோம். பெரும் பொருட்செலவு செய்து தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் இல்லை. தேமுதிக வெற்றி பெறமுடியும் என நினைக்கும் வார்டுகளுக்குச் சென்று பரப்புரையில் ஈடுபட வேண்டும்.

தனித்து போட்டி
திமுக கூட்டணி தவிர மற்ற கட்சிகள் தனித்து போட்டி என்பதால் நமது பலத்தை நிரூபிக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் இந்த அறிக்கையை பார்த்த தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போதே ஒரு தொகுதியில் வென்றாலும் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றார்.

விரும்பத்தகாத கூட்டணி
ஆனால் அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் விரும்பத்தகாத கூட்டணியால் தேமுதிகவின் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. விஜயகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட முடியவில்லை என சொல்லப்படுகிறது. வரும் நகர்ப்புற தேர்தலிலாவது விஜயகாந்த் கட்சி பணிகளில் ஈடுபட்டு பிரச்சாரம் செய்து தேமுதிகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications