LGBTQIA+ சமுதாயத்தினரை குறிப்பிடும் தமிழ் சொல்! அவகாசம் கேட்ட தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்
சென்னை: LGBTQIA+ உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் வழங்க அவகாசம் கேட்ட அரசு தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
LGBTQIA+ (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ்) சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில் இப்பிரிவினரை குறிப்பிடுவது தொடர்பான சொல் அகராதியை தயாரிப்பது தொடர்பான வழக்கு, கடந்த முறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, LGBTQIA PLUS சமூகத்தினருக்கான கொள்கை இன்னும் மூன்று மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், கொள்கை தயாராக இருப்பதாகவும் இன்னும் ஒரு மாதத்திற்குள் இறுதி செய்யப்படும். எனவே கொள்கை முடிவை தாக்கல் செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து, ஏற்கனவே 3 மாதம் அவகாசம் வழங்கிய நிலையில், மேலும் ஒரு மாதம் அவகாசம் கோருவது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் அரசு ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை என கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications