எங்கிட்ட ஒழுங்கு, மரியாதையா பேசனும்.. மேட்ச் ரெஃப்ரியிடம் மோதிய மெஸ்சி!
சென்னை: உலக கோப்பை கால்பந்து காலிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி, போட்டி ரெஃப்ரியுடன் வாக்கு வாதம் செய்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. சுவிட்சர்லாந்து அணி ஃப்ரீ கிக் ஆடும் போது, மெஸ்சியை சற்று பின்னால் நிற்குமாறு நடுவர் கூறவே, ஆத்திரப்பட்ட மெஸ்சி, என்னிடம் ஒழுங்காக பேச வேண்டும் என்று கையை உயர்த்தி பேசினார். நடுவரும் பதிலடியாக ஏதோ பேச இருவரும் சில வினாடிகள் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டனர்.
உலக கோப்பை கால்பந்து போட்டி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு நடைபெற்ற காலிறுதி போட்டியில் அர்ஜெண்டினாவும் சுவிட்சர்லாந்து அணிகளும் மல்லு கட்டின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை அர்ஜெண்டினா வீழ்த்தியது.

90 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன. இதையடுத்து, கூடுதல் நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து ஆட்டத்தை தங்கள் பக்கம் அர்ஜெண்டினா திருப்பியது. இந்த போட்டி உச்ச கட்ட பரபரப்புடன் நடைபெற்றது. போட்டியின் போது கால்பந்து உலகில் கொடி கட்டி பறக்கும் மெஸ்சி, ஒரு கோல் அடிக்க முயற்சித்தார். அப்போது, சுவிட்சர்லாந்தின் வலுவான தடுப்பு ஆட்டத்தால் இந்த கோல் மிஸ் ஆனது.
ஒருவரை ஒருவர் கையை உயர்த்தி
இதனால் கடும் அப்செட் ஆன மெஸ்சி, கோபத்துடன் காணப்பட்டார். அந்த சமயத்தில், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நடுவர் ஜோவோ பெட்ரோ பின்ஹெய்ரோவுடன் மெஸ்ஸி வாக்குவாதத்தில் ஈடுபட்டது மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்துக்கு ஃப்ரீ கிக் வழங்கப்பட்டபோது, மெஸ்ஸியிடம், தேவையான தூரம் பின்னால் நிற்குமாறு நடுவர் அறிவுறுத்தினார். நடுவர் கூறிய விதத்தால் கோபம் அடைந்த மெஸ்சி, அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
நடுவரிடம், என்னிடம் மரியாதையாகப் பேசுங்கள். என்னை அவமதிக்காதீர்கள். நான் உங்களிடம் மரியாதையாகப் பேசினேன்.. நீங்களும் என்னிடம் அதேபோல் பேசுங்கள்" என்று மெஸ்சி காட்டமாக பேசியதாக காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. நடுவரும் மெஸ்சியும் ஒருவரை ஒருவர் கையை உயர்த்தி ஆக்ரோஷமாக வாதம் செய்த காட்சிகள் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அர்ஜென்டினா அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
யார் இந்த நடுவர்?
அர்ஜெண்டினா - சுவிட்சர்லாந்து அணிகளுக்க்கு இடையேயான மோதலில் நடுவராக இருந்த ஜோயோ பின்ஹியாரோ போர்சுகல் நாட்டை சேர்ந்தவர். 38 வயஹான ஜோயோ பெட்ரோ பின்ஹியாரோ, ஐரோப்பிய போட்டிகள் பலவற்றில் பங்கேற்றுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடுவராக பணியை தொடங்கிய இவருக்கு ஒரே ஆண்டில் ஃபிபா சர்வதேச பேட்ஜ் கிடைத்தது.
ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டதால், முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளிலும் பங்கேற்க தொடங்கினார். யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக், யூரோபா லீக் மற்றும் 2025 யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பை உள்ளிட்ட முக்கிய சர்வதேச போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார். அவரது அனுபவம் மற்றும் நடுவராக அவர் காட்டிய திறமையால் 2026 பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி தொடருக்கு நடுவராக தேர்வு செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications