தேர்தலன்று நடந்த வன்முறை.. வாக்குச்சாவடியில் நடந்த 2 கத்திகுத்து சம்பவம்.. தவெகவுடன் மோதிய திமுக!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்ட சூழலில், இன்றைய நாளில் பல்வேறு பகுதிகளில் மோதல் சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. அதிலும் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதியில் வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். இந்த சம்பவத்தில் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 81.91% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. 2011 சட்டசபைத் தேர்தலில் 78% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இம்முறை அதனைவிடவும் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது. அதேபோல் வாக்குச்சாவடிக்கு 6 மணிக்குள் வருவோருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

காவலருக்கு கத்திக்குத்து
தமிழ்நாட்டில் வாக்கு சதவிகிதம் உயர்ந்திருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், பல்வேறு பகுதிகளிலும் அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாஎர் தொகுதியில் உள்ள பொறையார் தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைவர் காவலர் விக்னேஷ் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
தவெகவினர் 3 பேர் காயம்
இதையடுத்து காவலர் விக்னேஷ் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் முன்னாள் ராணுவ வீரர் பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி அசகாசனஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட எர்ரப்பட்டி கிராமத்தில் தவெக நிர்வாகிகள் மீது திமுகவினர் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர். தவெக நிர்வாகிகள் 3 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் பெண்ணுக்கு கத்திக்குத்து
இதேபோல் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் மேல்கோட்டை வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து நடந்த சம்பவம் அதிர செய்திருக்கிறது. மாரிமுத்து என்பவர் மீது பாலமுருகன் என்பவர் கத்தியை வீசியுள்ளார். அப்போது தவறுதலாக மாரிமுத்து அருகே நின்றிருந்த பெண்ணின் காலில் குத்தி காயம் ஏற்பட்டது.
திமுக vs அதிமுக மோதல்
தொடர்ந்து, சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தில் உள்ள 139ஆம் எண் வாக்குச்சாவடியில் திமுக மற்றும் அதிமுக முகவர்கள் இடையில் மோதல் ஏற்பட்டது. திமுக நிர்வாகி கந்தசாமி வாக்கு சேகரித்ததாக ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாக இந்த மோதல் தொடங்கி இருக்கிறது. இதில் லோகநாயகி என்ற பெண்ணை அறைந்துள்ளார். இதனால் மூக்கில் இருந்து அவருக்கு ரத்தம் வழிய, அவரின் உறவினர்கள் கந்தசாமியை அடித்து துவம்சம் செய்தனர்.
திமுக vs தவெக
அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெரியகோட்டை பகுதியில் உள்ள 73ஆவது வாக்குச்சாவடியில் தவெக மற்றும் திமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. பெண் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையை வைத்து வாக்கு செலுத்திவிட்டு பின்னர் மீண்டும் ஒருமுறை வாக்கு செலுத்த வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மோதல் ஏற்பட்டது.
பாஜக ஒழிக கோஷம்
மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டை தூய பிரான்சிஸ் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் திமுக மற்றும் பாஜகவினர் இடையில் மோதல் ஏற்பட்டது. அடையாள அட்டை இல்லாமலேயே பலரை வாக்களிக்க அனுமதிப்பதாக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பின் அந்த இடத்தில் தமிழிசை செளந்தரராஜன் வந்தார். அப்போது பாஜக ஒழிக, திமுக ஒழிக என்று இரு கட்சியினரும் கோஷமிட்டதால், கைகலப்பு ஏற்படும் சூழல் உருவாகியது. பின்னர் போலீசார் சமாதானம் செய்தனர்.












Click it and Unblock the Notifications