அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.. சட்டசபையில் ஜனநாயகம் இல்லையே..எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
சென்னை: சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவது எதுவும் நேரலையில் வருவதில்லை என்று கூறியும் சபாநாயகரை கண்டித்தும் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்கட்சியினர் பேசுவதை புறக்கணிப்பதாகவும் சட்டசபையில் ஜனநாயகம் இல்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 5 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். வயிறு வலியால் அந்த சிறுமி துடித்துள்ளது. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது.

பெற்றோர்கள் அளித்த புகாரை பதிவு செய்து எப்ஐஆர் எதுவும் போடவில்லை. நேற்றைய தினம் இரவு குழந்தையின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த அரசானது ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.
5 வயது சிறுமி பள்ளி தாளாளரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. பிஞ்சு குழந்தையை அந்த பள்ளியின் உரிமையாளரே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். அவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. பெற்றோர் புகார் அளித்து 13 மணிநேரம் கழித்துதான் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து நான் சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசும் போதே நேரலையை நிறுத்தி விட்டனர். வேண்டும் என்றே திட்டமிட்டு நேரலையை நிறுத்துகின்றனர். திட்டமிட்டு செய்கின்றனர். பெண் குழந்தையின் நிலைகுறித்து நான் பேசியதை புறக்கணித்து விட்டனர்.
எதிர்கட்சியினர் கேள்வி கேட்பதை ஒளிபரப்பாமல், அமைச்சர்கள், முதல்வர் பதில் சொல்வதை மட்டுமே ஒளிபரப்புகின்றனர். இது என்ன ஜனநாயகம்? பிரதான எதிர்கட்சியினர் பேசுவதையும் ஒளிபரப்ப வேண்டுமே? அதிமுக ஆட்சியில் இருந்த போது எல்லோர் பேசுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications