ஸ்டாலினுக்கு புது சிக்கல்.. யார் கண்ணு பட்டுச்சோ.. "அவர்" மீதும் புகாராமே.. சங்கடத்தில் அறிவாலயம்!
திமுகவில் மேலும் ஒரு அமைச்சர் மீதும் புகார் கிளம்பி உள்ளது
சென்னை: ஏற்கனவே 2 சீனியர் அமைச்சர்கள் மீது புகார்கள் கிளம்பி வரும் நிலையில், மேலும் ஒரு அமைச்சர் மீது புகார் வெடித்துள்ளதாம்.. இதுதான் திமுகவில் இன்றைய ஹாட் டாபிக்...!
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதுமே, தன்னுடைய அமைச்சரவையை கூட்டி ஒரு மீட்டிங் போட்டிருந்தார்.. அதில், யார் மீது புகார் வந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், ஒருவேளை தவறு செய்திருந்தால், அதை விசாரித்து உறுதியானதுமே, சம்பந்தப்பபட்ட அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என்று வார்ன் செய்திருந்தார்.
அதற்கேற்றபடி அமைச்சர்களும் எந்தவித குறையுமில்லாமல் தங்கள் பணிகளை செய்து வந்தனர்.. அந்தந்த துறை வாரியான நல்ல அறிவிப்புகளையும் மக்கள் நலனை முன்வைத்தே அறிவித்தும் வருகின்றனர்..
சென்னையில் 9 இடங்களில் கடைகள் மூட திடீர் உத்தரவு.. காலை திறந்திருந்து.. மாலையில் மூடப்பட்ட கடைகள்
அமைச்சர்கள்
தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவிருக்கும் 9 மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், அந்த மாவட்டம் மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டத்தின் கழக செயலாளர்கள் என அனைவருக்கும் உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்துமாறு சமீபத்தில் திமுக தலைமை உத்தரவு பிறப்பித்திருந்தது. சம்மந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களும் அந்த மாவட்டத்திற்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்கள் ஆகியோர் உள்ளாட்சி தேர்தலில் முழுமையான வெற்றியை பெற வேண்டும் என்பதற்கேற்ப கவனம் செலுத்தி வருகின்றனர்.
சீனியர்கள்
இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த வாரம் துரைமுருகன், தா.மோ.அன்பரசன் ஆகிய 2 அமைச்சர்கள் மீதுஅதிருப்திகள் வெடித்தது.. வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயனம் செய்த துரைமுருகன், கட்சி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலிலிலும் உள்ளடி வேலை செய்து கட்சியை தோற்கடித்தால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன். எல்லோரையும் கட்சியிலிருந்து நீக்குவேன் என்று பேசியது அதிருப்தியை கூட்டிவிட்டது.
தாமோ அன்பரசன்
அதேபோலதான், மதுராந்தகத்தில் ஒன்றிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் தா. மோ. அன்பரசனும், "மதுராந்தகம் தொகுதிக்குள் அடங்கிய அனைத்து உள்ளாட்சி இடங்களையும் திமுக கைப்பற்றியாக வேண்டும். அது நடக்கலைன்னா ஒன்றிய செயலாளர்கள் கழுத்தில் தலை இருக்காது, ஜெயிக்கலைன்னா கழுத்தறுத்துடுவேன்" என்கிற ரீதியில் கடுமை காட்டியிருக்கிறார்.
ராமச்சந்திரன்
இப்படிப்பட்ட சூழலில்தான் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மீது புகார் கிளம்பி உள்ளது.. அவரது சொந்த மாவட்டமான நீலகிரியில், படுகர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அமைச்சர் முன்னுரிமை கொடுக்கிறார் என்ற சர்ச்சை கிளம்பியிருக்கிறது. சமீபத்தில் படுகர் சமுதாயத்தை சார்ந்த சரவணகுமார் என்ற உதவி வனப் பாதுகாவலருக்கு குன்னூர், கோத்தகிரி, கட்டப்பெட்டு, கீழ்கோத்தகிரி வனச்சரகங்களில் கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவு ஆணை வெளியிட்டிருக்கிறார்கள்.
புகார்கள்
அதுமட்டுமல்ல, அமைச்சரின் வீடு, எஸ்டேட் உள்ளிட்ட சொத்துகள் இந்த சரகங்களை சுற்றித்தான் இருக்கிறதாம்.. அதனால் அவற்றை பார்த்துக்கொள்வதற்காகவே இப்படி கூடுதல் பொறுப்பு என்று கூறப்படுகிறது.. உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள சூழலில், இப்படி 3 அமைச்சர்கள் மீது ஒரேடியாக புகார்கள் வருவது திமுகவுக்குள் அதிர்ச்சியை கூட்டி வருகிறது..
ஸ்டாலின்
இந்த 3 பேருமே சீனியர் அமைச்சர்கள்.. இவர்களின் புகார்கள் அறிவாலயம் வரை வந்துள்ளன.. அடுத்தடுத்த தேர்தல்கள் நெருங்கி வரும்நிலையில், திமுகவின் வளர்ச்சி ஜரூர் வேகமெடுத்து வரும் நிலையில், ஆட்சிக்கு நற்பெயர் நாலாபக்கமும் கூடி வரும் நிலையில், இந்த பிரச்சனையை முதல்வர் ஸ்டாலின் எப்படி கையாளுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது...!