ஓஹோ, அப்படி.. பாஜக சுத்தியல்னா.. திமுக சாவி.. உதயநிதி ஸ்டாலின் ஒரே போடு!
சென்னை: இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அப்போது அவர் பூட்டு சுத்தியல் சாவியை வைத்து குட்டிக்கதை ஒன்றையும் கூறினார்.
அரசியல் கட்சித்தலைவர்கள் மேடையில் பேசும் போது சுவாரஸ்யத்திற்காக குட்டிக்கதை ஒன்றை கூறுவார்கள். ஜெயலலிதா கூறும் குட்டிக்கதைகள் சுவாரஸ்யமாக இருக்கும். பெரும்பாலும் திமுகவை தாக்குவதாகவே இருக்கும். சினிமாவில் நடிகர் விஜய் கூறும் குட்டிக்கதைகள் ரசிகர்களை மட்டுமல்லாது அனைவரையும் கவரும்.

இப்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் அவ்வப்போது குட்டி ஸ்டோரி கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
சேலத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி சொன்ன குட்டி ஸ்டோரி பலரையும் கவர்ந்தது.
பூட்டு ஒன்றை திறப்பதற்காக அதன் தலையின் மீது மிகப்பெரிய சுத்தி ஒன்றினை கொண்டு மத்திய அரசு ஓங்கி அடிக்கிறார்கள். ஆனால் அதை திறக்க முடியவில்லை. சிறிய சாவி அதை திறந்துவிட்டது. அப்போது நீ மட்டும் எப்படி பூட்டை திறந்தாய் என சுத்தியல் சாவியிடம் கேட்டது. அதற்கு சாவி பதிலளித்தபோது, நான் பூட்டின் இதயத்தை தொட்டேன். ஆனால் நீ தலையின் மீது அடித்தாய் என்று சொன்னது.

இதன்மூலம் கூறுவது என்னவென்றால், தமிழ்நாட்டு மக்களின் தலையில் மத்திய அரசு ஓங்கி அடித்தாலும், அது பலனளிக்காது. ஆனால் தமிழக மக்கள் சாவியை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார்கள். எனவே அவரால் மட்டுமே மக்களின் மனதை தொடமுடியும் என்று சொன்னார்.
திமுக அமைச்சர்கள் வீட்டில் தொடர்ந்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனையை கண்டு திமுகவின் கிளைச் செயலாளர் கூட பயப்படமாட்டார்கள். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கொள்கை வாரிசுகள் இளைஞர் அணியினர் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications