ஷாக்.. சேற்றில் சிக்கிய கலைவாணி.. அடுத்தடுத்து மீட்க போய் சிக்கிய 3 பெண்கள்.. நால்வரும் மூழ்கி பலி!
தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலம் ஏரியில் மூழ்கி 4 பெண்கள் பலியானார்கள்
சென்னை: துணி துவைக்க போன சித்ரா உட்பட 4 பெண்களும் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது.. அடி மேல் அடி வாங்கி கொண்டிருக்கும் சென்னைக்கு அடுத்த துயரமாக இந்த 4 பெண்களின் மரணம் வந்து சேர்ந்துள்ளது.
ஊரடங்கு என்பதால் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று அரசு சொல்லி வருகிறது.. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்காகவும் நடமாட்டம் கூடாது என்ற கட்டுப்பாடும் உள்ளது.
குறிப்பாக சென்னையில் தொற்று அதிகம் உள்ளது.. எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அரசு திணறி வருகிறது.. அதற்கு முழுமையான ஒத்துழைப்பை தர வேண்டிய மக்களில் சிலர் ஓரிரு இடங்களில் மீறியும் வருகின்றனர்.
இந்த சமயத்தில் தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. மணிமங்கலம் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் வசித்து வந்துள்ளவர் சித்ரா.. இவருக்கு 40 வயதாகிறது.. கணவர் பெயர் குணா. இன்று காலை சித்ரா மணிமங்கலம் ஏரிக்கரையில் நின்று துணி துவைத்து கொண்டிருந்தார்.. அவருடன் கலைவாணி 16, சந்தியா 14, பூர்ணிமா ஆகியோர் ஏரியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கலைவானி எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி கொண்டு அலறினார்.. அவரை மீட்க பூர்ணிமா, சந்தியா செல்ல, அவர்களும் சேற்றில் சிக்கி மூழ்கினர்... இவர்களில் யாரையாவது ஒருவரை காப்பாற்றலாம் என்று பதறி போன சித்ராவும் முயன்றார். ஆனால் ஏரிக்குள் இறங்கிய சித்ராவும் அந்த சேற்றில் சிக்கி மூழ்கினார்..
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தாலும், அவர்களை உயிருடன் மீட்க முடியவில்லை.. உயிரிழந்த நிலையில் 4 பெண்களின் சடலங்கள்தான் மீட்கப்பட்டு, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பப்பட்டது.. இது சம்பந்தமாக மணிமங்கலம் போலீசாரின் விசாரணையும் நடந்து வருகிறது.
இதில் உயிரிழந்த 4 பேருமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.. ஒரேநேரத்தில் ஒரே பகுதியை சேர்ந்த 4 பெண்களுமே இப்படி அநியாயமாக உயிரிழந்தது சென்னை மக்களை மேலும் கவலைக்குரியதாக்கி வருகிறது.