ரெண்டு கண்ணும் தெரியாத ஜெயா பாட்டி.. கணவர் சடலத்துடன் நடுரோட்டில் 12 மணி நேரம்.. சென்னையில் பரிதாபம்
கணவர் சடலத்துடன் 12 மணி நேரம் சாலையில் அழுத பாட்டி
சென்னை: ரெண்டு கண்ணும் தெரியாத ஜெயா பாட்டி, உயிரிழந்த கணவரின் சடலத்துடன் மயிலாப்பூர் ரோட்டில் 12 மணி நேரம் உட்கார்ந்திருந்த அவலம் நடந்துள்ளது. அடி மேல் அடி வாங்கி வரும் சென்னையில் இந்த துயர சம்பவம் நடந்து பெருத்த அதிர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தியது.
சென்னையை சேர்ந்தவர்கள் தங்கப்பன் - ஜெயா தம்பதி.. இவர்களுக்கு என்று வீடு வாசல் இல்லை.. மைலாப்பூர் பகுதியில் ரோசாரி சர்ச் ரோட்டில் உள்ள பிளாட்பாரத்தில்தான் இவர்களுக்கு வாசம்.
தங்கப்பனுக்கு கால்கள் செயல்படாது.. அதேபோல ஜெயா பாட்டி பார்வை இழந்தவர்.. இதனால் இவர்கள் 2 பேருமே பிளாட்பாரத்தை விட்டு எங்கேயும் நகர கூட முடியாது.
காணாமல் போன தாயுடன் 2 ஆண்டுக்கு பின் சேர்ந்த மகன்.. அன்னையர் தினத்தில் நிகழ்ந்த அதிசய சம்பவம்!
தம்பதி
இந்த பகுதியிலேயே இவர்கள் பல வருஷங்களாக உள்ளவர்கள்.. பிளாட்பாரத்திலேயே இருப்பதால் அந்த பகதி மக்களக்கு இந்த தம்பதி ரொம்ப பரிச்சயமும் கூட.. அதனால் பழக்கப்பட்டவர்கள் என்பதால் அடிக்கடி உணவு தந்தும் உதவி வந்திருக்கிறார்கள். தங்கப்பனுக்கு நடக்க முடியாது என்பதால், தன்னார்வலர் ஒருவர் தள்ளுவண்டியையும் வாங்கி தந்தார்.
தள்ளுவண்டி
எதுவுமே இல்லாத வெறுமையாக இருந்தவர்களுக்கு இந்த தள்ளுவண்டிதான் எல்லாமே.. எதையாவது விற்று பிழைத்து கொள்வதற்காக தள்ளுவண்டி வாங்கி தந்தால், அவர்களுக்கு வீடே அந்த தள்ளுவண்டி என்றாகிவிட்டது. வயதாகிவிட்டதால், கொஞ்ச நாளாகவே தங்கப்பனுக்கு உடம்பு சரியில்லை.. அதனால் தங்கப்பனை ஒருசிலர் உதவியோடு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார் ஜெயா பாட்டி.
கண் பார்வை
ஆனால் அவருக்கு உடல்நிலை அளவுக்கு அதிகமாக மோசமாகிவிட்டதால், சிகிச்சை தர முடியாது என்று திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். கண் தெரியாத நிலையில், நலிவுற்ற கணவனை எப்படி கவனித்து கொள்ள முடியும்? எப்படி சாத்தியம்? இருந்தாலும் ஜெயா பாட்டி முடிந்தவரை கணவரை கவனித்து கொண்டார்.. ஆனால் தங்கப்பன் இறந்துவிட்டார்.
புகார்
விஷயத்தை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தனர். ஆனால் கொரோனா பயத்தினால் மக்கள் யாருமே முதியவரை அடக்கம் செய்ய முன்வரவில்லை.. ஆனால் மாலை மட்டும் வாங்கி வந்து தங்கப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கணவன் கழுத்தில் மாலைகள் விழுந்து கிடக்க.. அடுத்து என்ன செய்வது, எங்கே போவது, என்று கூடதெரியாமல் சடலம் பக்கத்திலேயே ஜெயா பாட்டி உட்கார்ந்தபடியே இருந்துள்ளார்.
ரத்த மாதிரிகள்
இப்படியே 12 மணி நேரமாக தனியாக அழுது கொண்டிருந்திருக்கிறார். அதற்கு பிறகுதான் போலீசார் வந்து, தங்கப்பன் உடலை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தங்கப்பனுக்கு கொரோனா தொற்று இருந்ததா என்றும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ரத்த மாதிரிகளும், சளி மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளன.. பிறகு அழுதுகொண்டே இருந்த பார்வையற்ற ஜெயா பாட்டியை ஆதரவற்றோர் முகாமில் மாநகராட்சி ஊழியர்கள் சேர்த்தனர்.. இவர்களுக்கு எல்லாமுமாக இருந்த அந்த தள்ளுவண்டி என்ன ஆனது என தெரிவில்லை!