எச்.ராஜாவின் தேர்தல் அரசியல் அத்தியாயம் ஓவர்! சிவகங்கையை கூட்டணிக்கு கொடுத்தது பாஜக- அடுத்து ஆளுநர்?
சென்னை: தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்கள் அத்தனை பேரும் லோக்சபா தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா வழக்கமாக போட்டியிடும் சிவகங்கை தொகுதி, பாஜகவின் கூட்டணி கட்சியான இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கம் பேசி பேசியே வளர்ந்த இயக்கம். திராவிடர் இயக்கத் தலைவர்கள் அறிவார்ந்த கருத்துகளை, சமூக ஒடுக்குமுறைகளை விரிவாகப் பேசி மக்கள் மனதில் இடம் பிடித்தனர். இதற்கு நேர் எதிரானது வலதுசாரி இயக்கமான பாஜக.

பாஜக தலைவர்களும் இடைவிடாமல் பிரஸ் மீட் நடத்தி பொதுக்கூட்டங்களில் பேசுகின்றனர். ஆனால் பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டில் பேசுவது எல்லாமே சர்ச்சையாகவும் எதிர்ப்புக்குரியதாகவும் அமைந்துவிடுவதுதான் வழக்கமாகிவிடுகிறது. இத்தகைய சர்ச்சை பேச்சுகளில் முதலிடம் பிடிப்பவர்தான் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா.
தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை 2001 சட்டசபை தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். இந்த ஒரு வெற்றியைத் தவிர சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் மட்டுமல்ல சாரணர் இயக்கத் தேர்தலிலும் கூட வெற்றியை பெற முடியாதவராகிப் போனார் எச்,ராஜா.
எச்.ராஜாவின் தோல்வி வரலாறு:
1.1999-ம் ஆண்டு சிவகங்கை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்.
2.2006-ம் ஆண்டு ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார்.
3.2014-ம் ஆண்டு மீண்டும் சிவகங்கை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
4.2016 சட்டசபை தேர்தலில் தியாகராயர் நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.
5.2019-ல் சிவகங்கை லோக்சபா தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
6. சாரண சாரணியர் இயக்க தேர்தலில் போட்டியிட்டு வெறும் 52 வாக்குகள் பெற்று எச்.ராஜா த தோல்வியடைந்தது பெரும் விவாதப் பொருளானது.
இந்த நிலையில் பாஜகவில் அண்மைகாலமாக முக்கிய பொறுப்புகளில் இருந்து ஒதுங்கிய நிலையில்தான் எச்.ராஜா இருந்து வருகிறார். தமிழ்நாடு பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன், எல்.கணேசன், சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆளுநர்களான நிலையில் தமக்கும் அந்த பதவி கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்து வருகிறார் எச்.ராஜா. இதனாலேயே தேர்தல் அரசியலில் இருந்து விலகி நிற்பது எனவும் முடிவு செய்திருந்தார்.
இதற்கேற்ப தற்போது எச்.ராஜா வழக்கமாக போட்டியிடும் சிவகங்கை லோக்சபா தொகுதி, பாஜகவின் கூட்டணி கட்சியான தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, தேர்தல் அரசியலில் ஈடுபடுவதை எச்.ராஜா தற்போது விரும்பவில்லை. பாஜக மேலிடமும் விரைவில் அவரை ஆளுநராக நியமிக்கும் அறிவிப்பை வெளியிடக் கூடும். இத்தகைய பின்னணியில்தான் சிவகங்கை தொகுதி, கூட்டணிக் கட்சிக்கே கொடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.












Click it and Unblock the Notifications