திமுகவுடன் சிபிஎம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை- சிபிஐ போல 2+1 பார்முலாவை முன்வைக்கிறது?
சென்னை: திமுக கூட்டணியில் தற்போது சிபிஎம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) கட்சியுடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை கூட்டணி கட்சிகளுடன் திமுக நடத்தி வருகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது.

திமுகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸுக்கு அதிகபட்சம் 7 அல்லது 8 தொகுதிகள் தர திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி 13-ந் தேதி தமிழ்நாடு வரும் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார்.
இதேபோல சிபிஐ (இந்திய கம்யூனிஸ்ட்) கட்சியுடனும் திமுக குழுவினர் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் சிபிஐ கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 2 தொகுதிகளிலும் சிபிஐ வென்றது. இதனால் இம்முறை 2 லோக்சபா தொகுதிகள் பிளஸ் 1 ராஜ்யசபா சீட் தர வேண்டும் என்பது சிபிஐ-ன் கோரிக்கையாம்.
இதனைத் தொடர்ந்தே இன்று மதிமுக, சிபிஎம் கட்சிகள் திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்துகின்றன. மதிமுகவைப் பொறுத்தவரையில் 6 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். இதில் 2 தொகுதிகளை கேட்போம்; இந்த 2 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்பது நிலைப்பாடு.
சிபிஎம்மைப் பொறுத்தவரையில் திமுக தலைமையுடன் சில முரண்பாடுகள் இருந்து வருகின்றன. கடந்த ஆண்டு சிபிஎம் மூத்த தலைவர் ரங்கராஜன், திமுக அரசை விமர்சித்ததால் திமுக தலைவர்கள் கடுமையாக கொந்தளித்தனர். ரங்கராஜனை நாலாந்தர பேச்சாளர் என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி விமர்சித்திருந்தது. இந்த பின்னணியில் தற்போது சிபிஎம் குழுவினர் திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த வருகின்றனர். சிபிஎம் கட்சியின் பெ.சண்முகம் தலைமையிலான 4 பேர் கொண்ட குழு, திமுகவின் டிஆர் பாலு தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இன்றையப் பேச்சுவார்த்தையில் சிபிஐ போலவே சிபிஎம் கட்சியும் 2 லோக்சபா தொகுதிகள் ப்ளஸ் 1 ராஜ்யசபா சீட் என்ற கோரிக்கையை திமுகவிடம் முன்வைக்கக் கூடும் என கூறப்படுகிறது. கடந்த 2019 தேர்தலில் சிபிஎம் 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2ஐயும் கைப்பற்றியது. அதே தொகுதிகளையே இம்முறையும் ஒதுக்க வேண்டும் என்பதும் சிபிஎம்-ன் கோரிக்கையாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications