லோக்சபா தேர்தல் தேதி.. எமகண்டம் முடிந்து நல்ல நேரத்திற்காக காத்திருந்த தலைமைத் தேர்தல் ஆணையர்
சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளார் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார். சனிக்கிழமையான இன்றைய தினம் 3 மணி வரை எமகண்டம் என்பதால் அந்த நேரம் முடிந்த பிறகு நல்ல நேரத்திற்காக காத்திருந்து தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளார். கடந்த லோக்சபா தேர்தலின் போது ராகு காலத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியானதால் அரசியல் கட்சி தலைவர்கள் அதிருப்தியை வெளியிட்டதால் இந்த முறை நல்ல நேரத்திற்காக தேர்தல் ஆணையர் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.
ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் ஒன்றரை மணி நேரம் ராகுவும், ஒன்றரை மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றன என்பதை புராணங்கள் கூறுகின்றன. அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபாடு செய்யும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்கிறோம்.

18வது லோக்சபா தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு எப்போதும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவி வந்தது. இந்தநிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் டெல்லியில் தேர்தல் தேதி மற்றும் தேர்தல் நடைமுறைகளை சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அறிவித்தார்.
ஆள் செய்யாததை நாள் செய்யும் என்பார்கள். அரசியல்வாதிகள் எந்த ஒரு காரியத்தையும் நல்ல நேரம் நல்ல நாள் பார்த்துதான் செய்வார்கள். ஜோதிடத்தில் ராகு, கேது என்பது சர்ப்பங்களுக்கு சம்பந்தப்பட்டவை என்பதால், அது விஷ காலமாக கருதப்படுவதால் அந்த நேரத்தை ஒதுக்கி வைத்தார்கள்.
நல்ல நேரத்தில் செய்யும் நல்ல காரியங்கள் வெற்றியைத் தரும் என்பது நம்பிக்கை. அரசியல்வாதிகளுக்கு அந்த நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது. நல்ல நேரம் என்பது ராகு காலம், எமகண்டம் எனும் கெட்ட நேரங்கள் இல்லாமல் பார்த்துச் செய்ய வேண்டும். நல்ல நேரம் பார்த்து சென்றால் தடைகளின்றி வேலைகள் நடக்கும் என்பது முன்னோர்களின் கருத்து.
சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை ராகு காலம் அது விஷ காலம். இந்த நேரத்தில் நல்ல காரியம் எதையும் செய்ய மாட்டார்கள். கடந்த ஆண்டு ராகு கால நேரத்தில் தேர்தல் அட்டவணை வெளியானது. இந்த ஆண்டு எமகண்டம் முடியட்டும் நல்ல நேரம் வரட்டும் என்று காத்திருந்து லோக்சபா தேர்தல் தேதியை அறிவித்தார்.
தமிழகத்துக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும். மார்ச் 20ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications